இந்தியாவில் மார்ச் மாத தொடக்கத்தில் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போதுவரை தொடர்ந்து வருகிறது. பொதுமக்களைக் கடந்து, மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களும் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதேபோல, அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரும் கொரோனா பாதிக்கப்பட்டுவருகின்றனர். அந்தவகையில், உத்ரகாண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங்குக்கு டிசம்பர் 18-ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 60 வயதான அவர், கொரோனா பாதிப்பால் எந்த அறிகுறியும் இல்லாததால் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த அவருக்கு நேற்று லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, மருத்துவ பரிசோதனைக்காக டேராடூனிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து தெரிவித்த மருத்துவர்கள், ‘திரிவேந்திர சிங்கின் மார்புப் பகுதியில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவரது நுரையீரல் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளனர்.
அதனையடுத்து, மருத்துவர்களின் அறிவுரையின்படி, மாநில அரசின் ஹெலிகாப்டர் மூலம் அவரை டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். திரிவேந்திர சிங், ஏற்கெனவே நுரையீரலைப் பாதிக்கும் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டவர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.