மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போது மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி அம்மாநிலத்தின் பாரம்பரிய நடனத்தை அங்கிருந்த பெண்களுடன் இணைந்து ஆடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 5ம் தேதி என இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10ம் தேதி எண்ணப்படும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், கடந்த வெள்ளியன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சிதுறை அமைச்சர் ஸ்மிருதி இராணி கலந்துகொண்டார். கூட்டத்தில் பேசிய அவர் காங்கிரஸ் கட்சி மணீப்புரை ஏ.டி.எம். போன்று பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினார். பிரதமர் மோடி விவசாயிகளுக்கு நிதி உதவி திட்டத்தை செயல்படுத்தி உள்ளார் என்றும் 11 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவில் 175 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை -மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு
மீண்டும் பாஜ.க. ஆட்சிக்கு வந்தால் மணிப்பூர் விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.2000 வழங்கப்படும் என கூறிய ஸ்மிருதி இராணி, பிப்ரவரி 28க்கு பிறகு மணிப்பூரில் முதல் எய்ம்ஸ் மருத்துவமனையை பாஜக கொண்டு வரும் எனவும் உறுதி அளித்தார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பெண்கள் மணிப்பூர் நடனம் ஆடினர். இதனை பார்த்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி அவர்களுடன் சேர்ந்து மணிப்பூர் நடனம் ஆடினார். இது தொடர்பான வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.