நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் துரிதமாக செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பல்வேறு முன்னெடுப்பை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் முக்கிய நகர்வாக ஜூலை 15ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை 75 நாள்களுக்கு தகுதியுள்ள அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் இலவசமாக செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டது. நாட்டின் 75 ஆவது சுதந்திர தினம் தற்போது கொண்டாடிவரும் வேளையில் அதை சிறப்பிக்கும் விதமாக இந்த முடிவானது எடுக்கப்பட்டது.
இந்நிலையில், மக்கள் பூஸ்டர் டோஸ் செலுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக, அவர்கள் பணிபுரியும் இடங்களில் இலவச தடுப்பூசி போடுவதற்குச் சிறப்பு முகாம்கள் நடத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் பணியாளர் நலத்துறை வாயிலாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த சிறப்பு முகாம்களில் பணியாளர்களுடன் சேர்ந்து அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் இதுவரை 201 கோடியே 68 லட்சத்திற்கு மேலான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 102 கோடிக்கும் மேற்பட்டோர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 92.89 கோடி பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். 6.79 கோடி பேர் முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்தியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 34 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆசிரியர்கள் பணி நியமன மோசடி: மேற்கு வங்கஅமைச்சரின் கூட்டாளி வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்.. அமலாக்கத்துறை சோதனையில் அம்பலம்!
அதேவேளை, ஜூலை 18ஆம் தேதி நிலவரப்படி நாட்டின் மக்கள்தொகையில் தகுதி பெற்ற 4 கோடி பேர் இதுவரை ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்திக்கொள்ளவில்லை என மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.