குஜராத் மாநிலத்துக்கு வருகை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை ஒரு லட்சம் பேர் வரை திரண்டு வரவேற்பார்கள் என்று அகமதாபாத் மாநகராட்சி ஆணையாளர் விஜய் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிப்ரவரி 24-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத் விமானநிலையத்துக்கு வந்திறங்குகிறார். அவரை, பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்கிறார். அவருக்கு ராணுவ மரியாதை மற்றும் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதையடுத்து, சபர்மதி ஆசிரமம் சென்று பார்வையிடும் ட்ரம்ப், பின்னர், பிற்பகல் 1.15 மணியளவில் மோட்டேரா மைதானத்தில் நடைபெறும் “நமஸ்தே ட்ரம்ப்“ (Namaste Trump) நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதை தொடர்ந்து, அங்கிருந்து பிற்பகல் 3.30 மணிக்கு தனது மனைவி மெலானியாவுடன் ஆக்ரா புறப்படுகிறார். மாலை 4.30 மணிக்கு ஆக்ரா செல்லும் ட்ரம்பை, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் வரவேற்கிறார்.
முன்னதாக, இந்திய வருகை குறித்து கடந்த சில தினங்களுக்கு பேசியிருந்த ட்ரம்ப், ‘இந்தியாவில் தன்னை ஏழு மில்லியன்(70 லட்சம்) பேர் வரவேற்பார்கள் என்று மோடி தெரிவித்துள்ளதாக உற்சாகமாக பேசியிருந்தார். அவருடைய பேச்சு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
அகமதாபாத்தின் மொத்த மக்கள் தொகையே 80 லட்சம் இருக்கும். இந்தநிலையில், எப்படி 70 லட்சம் பேர் ட்ரம்பை வரவேற்க முடியும் என்று கேள்வி எழுந்தது. இதுகுறித்து தெரிவித்த அகமதாபாத் மாநகராட்சி ஆணையாளர் விஜய் நெஹ்ரா, ‘ஒரு லட்சம் பேர் வரை திரண்டு ட்ரம்பை வரவேற்பார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.