பிரதமர் மோடியை நேரில் சென்று வரவேற்காத சம்பவம் அரசியல் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பல்வேறு கேள்விகளை பாஜகவிற்கும், பிரதமர் மோடிக்கும் எழுப்பியுள்ளார். முடிந்தால் தனது ஆட்சியை கவிழ்க்கட்டும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் இரு நாள்கள் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஹைதராபாத் வந்தடைந்தார். தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரதமர் மோடியை நேரில் வரவேற்கவில்லை.
கடந்த 5 மாதங்களில் பிரதமர் உடனான சந்திப்பை சந்திரசேகர ராவ் தவிர்ப்பது இது மூன்றாவது முறை ஆகும். சந்திரசேகர ராவ்வின் இந்த செயலுக்கு பாஜக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியை தெலங்கானா முதலமைச்சர் நேரில் சென்று வரவேற்காத விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் , புலி வரும் போது நரிகள் ஓடி விடும் என விமர்சித்தார். முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஏன் இப்படி செய்கிறார் என்பது பற்றி தங்களுக்கு தெரியவில்லை என்றும், விரைவில் காவி, தாமரைக் கொடி தெலங்கானாவில் ஏற்றப்படும் என்றும் பண்டி சஞ்சய் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பாஜக மற்றும் பிரதமர் மோடியிடம் அடுக்கடுக்கான கேள்விகளை சந்திரசேகர ராவ் எழுப்பியுள்ளார். அதன்படி, விவசாயிகள் நலனுக்காக கொண்டு வரப்பட்டதாக பாஜக அரசு கூறிய வேளாண் சட்டத்தை, பிரதமர் மோடி தலைமையிலான அரசு திரும்பப் பெற்றது ஏன்? எனக் கேள்வி எழுப்பி உள்ளார். விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பு மடங்காக உயர்த்துவேன் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்த நிலையில், தற்போது விவசாய உற்பத்திக்கான முதலீடு இரு மடங்காக அதிகரித்திருப்பது ஏன்? எனவும் சந்திரசேகர ராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க ஹைதராபாத் வந்த பிரதமர் மோடி - புறக்கணித்த கேசிஆர்!
Make in India திட்டத்தின் கீழ் எத்தனை வேலைவாய்ப்புகளை மத்திய அரசு உருவாக்கி இருக்கிறது என்ற புள்ளி விவரங்களை பிரதமர் மோடி வெளியிட வேண்டும் என வலியுறுத்தி உள்ள சந்திரசேகர ராவ், வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருக்கும் கருப்புப் பணத்தின் அளவு பிரதமர் மோடியின் பதவிக் காலத்தில் 2 மடங்காக அதிகரித்துள்ளதாக விமர்சித்தார்.
மகாராஷ்ட்ராவைப் போல் தெலங்கானாவிலும் ஆட்சி மாற்றம் நடக்கும் என பாஜகவினர் கூறி வருவது தொடர்பாக பேசிய சந்திரசேகர ராவ், முடிந்தால் ஆட்சி மாற்றத்தை நடத்திக் காட்டுங்கள் என சவால் விடுக்கும் தொணியில் பேசினார். இது தொடர்பாக, ‘119 உறுப்பினர்களைக் கொண்ட தெலுங்கானா சட்டசபையில் டிஆர்எஸ் கட்சிக்கு 100க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. நாங்கள் தயாராக இருக்கிறோம், காத்திருக்கிறோம். மேலும் மத்தியில் பாஜக அரசை கவிழ்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம்' என அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chandrasekra Rao, Hyderabad, PM Narendra Modi, Telangana