பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், நாளை பொது விடுமுறை அளிக்கப்படுவதாக மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்திய சினிமாவில் பல மொழிகளில் இன்றும் ரசிக்கும் படியான பல நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ள பிரபல பாடிகியான லதா மங்கேஷ்கர் இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்பட்டவர். பழம் பெரும் பாடகியான இவர் கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை ஓரளவு தேறிய நிலையில், நேற்று மாலை மீண்டும் மோசமானது. தொடர்ந்து, இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.
லதா மங்கேஷ்கர் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்... மருத்துவமனையில் உயிர் பிரிந்தது
லதா மங்கேஷ்கருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும், இதன் போது இந்தியா முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர அரசு சார்பில் லதா மங்கேஷ்கருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மேலும், பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், நாளை பொது விடுமுறை அளிக்கப்படுவதாக மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பள்ளி, கல்லூரிகள், அரசு, தனியார் அலுவலகங்கள் அனைத்திற்கும் மகாராஷ்டிராவில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.