உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் சூப்பர்டெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் 40 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட இரட்டை கோபுரத்தை கட்டியுள்ளது. சுமார் 7,000 பேர் தங்கும் வசதி கொண்ட இந்த குடியிருப்பில் இதுவரை யாரும் குடியேறவில்லை. ஒரு டவரில் 32 தளங்களும் மற்றொரு டவரில் 29 தளங்களும் உள்ளன. இந்நிலையில், இந்த கட்டுமானமானது விதிகளுக்கு புறம்பானது என புகார் எழுந்தது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வந்த நிலையில், கடந்தாண்டு கட்டடங்களை வெடி வைத்து தகர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த கட்டடம் நாளை ஆகஸ்ட் 28ஆம் தேதி மத்தியம் 2.30 மணிக்கு இடிக்கப்படவுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த இரட்டை கோபுர கட்டடத்தின் அருகே வசிக்கும் 7,000-8,000 மேற்பட்ட மக்களை வெளியேற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நாளை காலை 7 மணிக்கு முன்னர் அனைவரும் வெளியேற்றப்பட்டுவிடுவார்கள் என நொய்டா நகர்ப்புற நிர்வாகம் தெரிவித்துள்ளது. செக்டார் 23 ஏவில் உள்ள எமரால்டு கோர்ட் மற்றும் ஏடிஎஸ் கிராமத்தில் வசிக்கும் மக்கள் 150க்கும் மேற்பட்ட வளர்ப்பு பிராணிகள் காலை 7 மணிக்குள்ளும், பாதுகாப்பு ஊழியர்கள் மத்தியம் 12 மணிக்குள்ளும் வெளியேற்றப்படவுள்ளனர்.
அதேபோல், அப்பகுதியில் உள்ள 2,700 வாகனங்களும் அப்புறப்படுத்தப்படவுள்ளன. அங்கிருந்து வெளியேறும் நபர்களுக்கு தற்காலிகமாக அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளான பரஸ்வநாத் ஸ்ரீஸ்தி, பரஸ்வநாத் பிரெஸ்டீஜ், எல்டிகோ யுடோபியா போன்ற இடங்களில் தங்குவதற்கு அப்பகுதியின் குடியிருப்பு நல சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. அங்குள்ள கிளப்ஹவுசில் சுமார் 200 பேரை தங்க வைத்து அவர்களுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பரஸ்வநாத் பிரெஸ்டீஜ் சோசைடி 100-150 பேர் தங்க படுக்கை, நாற்காலி, அவரச மருத்துவ அறை போன்றவற்றை ஏற்பாடு செய்துள்ளது. அதேபோல் அப்பகுதி மக்கள் மீண்டும் தங்கள் வசிப்பிடத்திற்கு மாலை 4 மணிக்கு தான் அனுமதி கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. பாதுகாப்பு அதிகாரிகள் முறையான ஆய்வு செய்த பின்னரே அனுமதி வழங்கப்படும்.
இதையும் படிங்க: சோனாலி போகாத் மரணத்தில் திடீர் திருப்பம்.. வெளியான அதிர்ச்சி தகவல்கள்
இந்த மாபெரும் குடியிருப்புகள் இடிப்பு காரணமாக அங்கு பெரும் தூசி மற்றும் புகை ஏற்பட்டு சுகாதார சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அங்குள்ள பெலிக்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்து 7 முதல் 90 நாள்கள் இந்த சிக்கல் இருக்கும் என்பதால் அதை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன்படி அங்கு வசிப்பவர்கள் முக கசவம், கண்கள் பாதுகாப்புக்கு கண்ணாடி, சரும பராமரிப்பு கிரீம்கள் பயன்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான குடியிருப்பு வாசிகள் தங்கள் வசிப்பிடத்தை டெல்லி, குருகிராம், காசியாபாத் போன்ற பகுதிகளுக்கு மாற்றி செல்ல எண்ணத்தில் உள்ளதாகவும் மேலும், சிலர் இந்த காலகட்டத்தில் உத்தரகாண்ட், ராஜஸ்தான் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Noida, Noida Twin Tower