தெலங்கானாவில் காதலியின் நிச்சயதார்த்தத்தை தடுக்க நினைத்த காதலன் 100 பேர் கொண்ட கும்பலுடன் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி பெண்ணை தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காதலியை கடத்துவதற்காக காதலனால் நடத்தப்பட்ட களேபரம்தான் தெலங்கானாவில் நடந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் அதிலாபாத் பகுதியில் வசிப்பவர் தாமோதர் ரெட்டி.இவருடைய 24 வயது மகள் வைஷாலி பல் மருத்துவராக இருக்கிறார்.ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ‘மிஸ்டர் டீ’ என்ற பெயரில் கடைகள் வைத்திருப்பவர் நவீன் ரெட்டி.
நவீன் ரெட்டியும்-வைஷாலியும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.வைஷாலியை தினமும் சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு எதிரே டீக்கடையும் ஆரம்பித்துள்ளார் நவீன்.டீக்கடைக்கு வருவதுபோல வைஷாலியை சந்தித்து, காதலை வளர்த்துள்ளார் நவீன். இருவரின் காதல் விவகாரம் வைஷாலியின் வீட்டிற்கு தெரியவர அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் பெற்றோர் பேச்சை கேட்டு நவீன்ரெட்டியிடம் இருந்து விலக ஆரம்பித்துள்ளார் வைஷாலி.ந வீனிடம் வைஷாலி பேச மறுத்த நிலையில், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் வைஷாலியை தொந்தரவு செய்துள்ளார் நவீன்.
இந்நிலையில் வைஷாலிக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தனர் அவரது பெற்றோர்.அடுத்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக இருந்தது.இந்நிலையில் வைஷாலி வீட்டிற்கு கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்த கும்பல் திடீரென தாக்குதல் நடத்த தொடங்கியது.வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் அந்த கும்பல் அடித்து உடைத்தது.
வீட்டில் எந்த பொருட்களையுமே பயன்படுத்த முடியாத அளவிற்கு அடித்து நொறுக்கப்பட்டன.இதை தடுக்க வந்த வைசாலியின் தந்தை தாமோதர் கடுமையாக தாக்கப்பட்டார். அவரது தலையில் ரத்த காயம் ஏற்பட்டது. வைஷாலியின் தாயையும் அந்த கும்பல் தாக்கியது.மேலும் வைசாலி வீட்டிற்கு வெளியே நிறுத்தியிருந்த கார்களும் அடித்து உடைக்கப்பட்டன.
பின்னர் அந்த கும்பல் வைஷாலியை காரில் கடத்தி சென்றனர்.கடத்தலை தடுக்க முயன்ற பொதுமக்களையும் அந்த கும்பல் கண்மூடித்தனமாக தாக்கியது.ஏதோ கலவரம்போல நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் வன்முறை சம்பவங்கள் முழுவதும் பதிவாகியுள்ளன.
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் தாமோதரின் உறவினர்கள் விரைந்து வந்து சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.போலீசார் அவர்களை தடுக்க முயன்றும் முடியவில்லை. அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.மேலும் வைஷாலி வீட்டிற்கு எதிரே நவீன் போட்டிருந்த டீக்கடையையும் உறவினர்கள் அடித்து உடைத்தனர். ஜேசிபி இயந்திரம் கொண்டுவரப்பட்டு கடை இடிக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டது.
தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் நவீன் ரெட்டியை கைது செய்தனர்.மேலும் தாக்குதலில் ஈடுபட்டதாக 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 18 பேரை கைது செய்தனர்.இந்நிலையில், மறுநாள் காலையில் தனது தந்தைக்கு செல்போனில் பேசிய வைஷாலி, தான் நலமுடன் இருப்பதாக கூறினார்.
உடனே அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்ற போலீசார் அவரை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்தனர். வைஷாலியின் வீட்டிற்குள் கும்பல் புகுந்து தாக்குதல் நடத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Telangana