தேர்தலின் போது அரசியல் கட்சிகள் மக்களை கவர இலவசங்கள் வழங்கும் பிரச்னையில் மத்திய அரசு ஏன் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க தவறுகிறது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தேர்தல் நேரங்களில் மக்களை கவர அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகளை எதிர்த்து பாஜக முக்கிய தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என ஒரே நோக்கத்தால் இந்த இலவச அறிவிப்புகள் வெளியிடப்படுவதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா அமர்வில் நடைபெற்று வருகிறது. அப்போது வேறு வழக்கிற்காக நீதிமன்றத்தில் இருந்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபலிடம் இலவசங்கள் குறித்து நீதிபதிகள் கருத்து கேட்டனர். அதற்கு பதிலளித்த கபில் சிபல், நிதி ஆணையமே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் மத்திய அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் கூறினார்.
இதனையடுத்து மத்திய அரசு வழக்கறிஞர் நடராஜனிடம் நிதி ஆணையத்திடம் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை பெற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அமித் சர்மா, மத்திய அரசு சட்டம் இயற்றி இலவசங்கள் வழங்குவதை தடுக்கலாம் என கூறினார்.
அப்போது குறுக்கிட்ட மத்திய அரசு வழக்கறிஞர், இந்த விவகாரம் முழுக்க முழுக்க தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என தெரிவித்தார். இதற்கு அதிருப்தி தெரிவித்த தலைமை நீதிபதி, மத்திய அரசு தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர், அதன் பிறகு இலவசங்களை வழங்கலாமா வேண்டாமா என முடிவு செய்யலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் அடுத்த விசாரணை ஆகஸ்ட் மாதம் 3- ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்தனர்.
இதையும் படிங்க: மின் பற்றாக்குறையை சமாளிக்க 76 மில்லியன் டன் நிலக்கரியை இறக்குமதி செய்யும் இந்தியா!
மனுதாரரான அஸ்வினி குமார், தேர்தல் ஆணையம் மாநில மற்றும் தேசிய கட்சிகள் ,இலவச அறிவிப்புகள் வெளியிடுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மாநில அரசுகள் பல லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்திருப்பதாவும், இலவசங்களை தொடர்ந்தால் இலங்கையின் நிலையே இந்தியாவுக்கு ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central government, Election commission of India, Supreme court