SUPREME COURT HELD CONSENT OF FAMILY NOT NECESSARY WHEN TWO ADULTS AGREE TO MARRY SKD
18 வயதைக் கடந்தவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கு பெற்றோர் அனுமதி தேவையில்லை - உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
வயது வந்தவர்கள் இரண்டு பேர் திருமணம் செய்துகொள்வதற்கு பெற்றோர், சமூகம் உள்ளிட்ட யாருடைய அனுமதியும் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கர்நாடகா மாநிலம் பெலாகவி மாவட்டத்திலுள்ள முர்காட் காவல்நிலையில், பெற்றோர் ஒருவர் அவரது மகளைக் காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக, காவல்துறை விசாரணை நடத்தியபோது, பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டது அவருடன் வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது. அந்தப் பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டதும் அவர் வாழுமிடமும் தெரிந்த பிறகும், காணாமல் போன வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி பெண்ணை முர்காட் காவல்நிலையத்துக்கு வந்து பதிலளிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார். அதனையடுத்து, பெண் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கத் தொடரப்பட்டது.
அந்த வழக்கில், ‘காவல்துறை விசாரணை அதிகாரி என்னை கர்நாடாக மாநிலத்துக்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார். இல்லையென்றால் என்னுடைய கணவர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்துவிடுவேன் என்று மிரட்டுகிறார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கவுல் மற்றும் ஹிரிஸிகேஷ் ராய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ‘18 வயதைக் கடந்தவர்கள், அவர்களுக்கு விருப்பமானவர்களைத் திருமணம் செய்துகொள்வதற்கு உரிமை உள்ளது. அந்த உரிமை பணம், சாதி, சமூகம் உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்படக்கூடாது. இதுதொடர்பான வழக்குளை விசாரிக்க, பயிற்சியை இந்த விசாரணைக்கு அதிகாரிக்கு மட்டுமல்லாமல் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் வழங்கவேண்டும்.
சமூகத்திலுள்ள இதுபோன்ற சிக்கலான பிரச்னைகளை கையாள்வதற்கு ஏற்றவகையில் சில வழிமுறைகளையும் பயிற்சி திட்டங்களையும் வழங்கவேண்டிய அவசியம் உள்ளது. படித்த இளைஞர்கள் வெவ்வேறு சாதிகளில் தங்களுக்கு விருப்பமானவர்களைத் திருமணம் செய்துகொள்கின்றனர். இதுபோன்ற கலப்புத்திருமணங்கள்தான் சாதி, மத மோதல்களை குறைப்பதற்கான வழியாக உள்ளது. ஆனால், அந்த இளைஞர்கள மிரட்டலை எதிர்கொள்கின்றனர். அந்த இளைஞர்களுக்கு உதவுவதற்கு நீதிமன்றம் வந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளது.