உயர் ஜாதி பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீட்டு வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் வாதங்கள் முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2019-ம் ஆண்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறியப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்து, 103-வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை கொண்டுவந்தது. ஆனால் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும்முறை அரசியலமைப்பில் இல்லை என்று கூறி யூத் ஃபார் ஈகுவாலிட்டி என்ற அமைப்பு, அரசியல் கட்சிகள், தனிநபர்கள் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
பல்வேறு உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து, தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் ரவீந்திர பட், தினேஷ் மகேஷ்வரி, எஸ்.பி.பர்திவாலா, பெல்லா த்ரிவேதி உள்ளிட்ட 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை மேற்கொண்டது. யூத் ஃபார் ஈகுவாலிட்டி, தமிழ் நாடு, கேரளா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநில அரசுகள், திமுக, விசிக, உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தரப்பில் வாத, பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன.
செவ்வாய் கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையின் போது, "தமிழ்நாடு பட்டியலில் உள்ள ஓ.பி.சி பிரிவினர் முழுமையாக மத்திய அரசின் பட்டியலில் சேர்க்கப்படாததால் மத்திய அரசு பணிகளில் அனைத்து ஓ.பி.சி பிரிவினருக்கும் பணி கிடைப்பதில்லை என வழக்கறிஞர் வில்சன் எழுத்து பூர்வமாக வாதிட்டார்.
பொருளாதாரர இடஒதுக்கீடு கூடாது என்பதை முந்தைய உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் இட ஒதுக்கீடு என்பது வறுமையை ஒழிப்பது அல்ல. பின் தங்கிய சமூகத்தை உயர்த்துவதற்கான திட்டம் என்றும் வில்சன் வைத்த எழுத்துபூர்வ வாதத்தில் கூறப்பட்டது.
மேலும் 31.2% பேர் உயர்வகுப்பில் பொருளாதாரத்தில் பிந்தங்கியவர்கள் உள்ளனர் என்ற மத்திய அரசு வழக்கறிஞர் வைத்த தரவுகள் தவறானவை என்றும் வில்சன் தெரிவித்தார்.
அந்த தரவு, NSO வேலைவாய்புக்காக 1.24 லட்சம் வீடுகளில் எடுக்கப்பட்ட கணக்கு என்றும் சமூக அடிப்படையிலான கணக்கு அல்ல என்றும் அவர் கூறினார்.
எனவே, சினோ ஆணையம் குறிப்பிட்டுள்ள அந்த தரவுகளை 10% இட ஒதுக்கீட்டுக்கான அடிப்படையாக எடுக்கக் கூடாது என்றும் சமூக இடஒதுக்கீட்டை பாதிக்கும் 10% இடஒதுக்கீடு சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்றும் வில்சன் வாதிட்டார்.
இதையும் வாசிக்க: ‘எத்தனையோ கல்லூரிகள் இருந்தாலும், சில கல்லூரி மாணவர்கள் தான் உயர்ந்த இடத்திற்கு செல்கின்றனர்’ – பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேச்சு
பின்னர் மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 10% இட ஒதுக்கீடு வழங்கியதால் இடஒதுக்கீடு பிரிவினருக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றார். அந்த ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உயர்கல்வி நிலையங்களில் 2,14,000 இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள் கட்டமைப்புக்காக ரூ. 4,315 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் "மத்திய பல்கலைகழகங்களில் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கட்டணம் எவ்வளவு?, அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி தொகை எவ்வளவு? என்ற விவரங்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
செப் 13 ஆம் தேதி முதல் 7 நாட்கள் இறுதி விசாரணை நடைபெற்று அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கபட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Court Case, Reservation, Supreme court