சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு வந்த மாணவனை பள்ளிக்கு வரத் தடை விதித்ததால் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தெலங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்திலுள்ள புவனகிரியில் இந்தியன் மிஷனரி ஸ்கூல் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் நான்காம் வகுப்பு வரை படிக்கும் மாணவன் பிரனித் ரெட்டி சபரிமலைக்கு செல்வதற்காக மாலை போட்டுக்கொண்டு இன்று பள்ளிக்கூடத்திற்கு வந்தார்.
சபரிமலைக்கு செல்வதற்காக மாலை போட்டுக்கொண்டு பள்ளிக்கூடத்துக்கு வரக்கூடாது என்று கூறிய பள்ளி நிர்வாகத்தினர் எத்தனை நாட்கள் மாலையுடன் இருக்க வேண்டும் என்று பிரனித் ரெட்டியிடம் விசாரித்தனர்.
41 நாட்கள் மாலை போட்டு விரதம் இருக்க வேண்டும். அதன்பின் சபரிமலைக்கு சென்று திரும்பிய பின் மாலையை கழட்டி விரதத்தை முடித்துக் கொள்வேன் என்று மாணவன் பிரனித் ரெட்டி கூறினார். எனவே மாணவன் பிரனித் ரெட்டியை 41 நாட்கள் பள்ளிக்கூடத்துக்கு வரக்கூடாது என்று கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தது பள்ளி நிர்வாகம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர்கள், உறவினர்கள் ஆகியோர் அங்கு சென்று போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பள்ளிக்கூடத்திலிருந்து மேஜை, நாற்காலிகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர்.
மேலும் இந்த சம்பவம் பற்றி அறிந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள், ஹிந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆகியோர் பள்ளி முன் திரண்டு பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பஜனை பாடல்களை பாடியவாறு பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்திடம் மாணவனை வகுப்பில் அனுமதிப்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.