கேரளாவைச் சேர்ந்த சரிதா நாயர் 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் எர்ணாகுளம் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்தார். கேரளாவில் நடைபெற்ற சோலார் ஊழல் விவகாரத்தில் அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருடைய வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர். அதனை எதிர்த்து அவர், கேரளா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கை கேரளா உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து, இரு தொகுதிகளிலும் நடைபெற்ற தேர்தல்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, வி.ராமசுப்ரமணியன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.