சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய நாள்தோறும் 5000 பக்தர்களை அனுமதிக்க கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய திங்கள் முதல் வெள்ளி வரை 2000 பக்தர்களும். சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் 3000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்தநிலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனையடுத்து வரும் 20ம் தேதி முதல் நாள்தோறும் 5000 பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேபோல் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை 24 மணி நேரத்திற்குள் கொண்டுவர தேவஸ்தானம் அறிவுறுத்தி நிலையில், 48 மணி நேரமாக உயர்த்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்யலாம். பம்பை ஆற்றில் பக்தர்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 10 வயது முதல் 60 வயது வரையிலான பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். கட்டாயமாக தனி மனித இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டும். அதுமட்டுமின்றி சானிடைசர் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் வழிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளன.