ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள காக்கிநாடா பகுதியை சேர்ந்தவர் அனந்தா உதய் பாஸ்கர். அனந்தா ஆளும் ஒய்.எஸ்.ஆர்
காங்கிரஸ் கட்சியின் மேல்சபை உறுப்பினர் ஆவார். அவரிடம் சுப்பிரமணியம் என்பவர் இதற்கு முன்னர் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை சுப்பிரமணியம் வீட்டிற்கு சென்ற சட்டமேலவை உறுப்பினர் ஆனந்தா, தனது ஓட்டுநர் சுப்பிரமணியத்தை தன்னுடைய காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
நேற்று நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் சுப்ரமணியம் வீட்டிற்கு வந்த மேல்சபை உறுப்பினர் ஆனந்தா, 'சாப்பிடுவதற்காக டிபன் வாங்க மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டு சுப்பிரமணியம் இறந்துவிட்டார்' என்று கூறி தன்னுடைய காரில் இருந்த சுப்பிரமணியம் உடலை அவருடைய குடும்பத்தாருக்கு காண்பித்தார். இதனால் அதிர்ச்சியும் ஆவேசமும் அடைந்த சுப்பிரமணியம் உறவினர்கள் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்து தப்பி சென்ற எம்எல்சி ஆனந்தா தற்போது தலைமறைவாக இருக்கிறார்.
தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று சுப்பிரமணியம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை ஆனந்தாவை தேடி வருகின்றது. மரணமடைந்த ஓட்டுநர் ஐந்தாண்டுகளாக ஆனந்தாவிடம் வேலை பார்த்து வந்தநிலையில், அன்மையில் தான் வேலையை விட்டு நின்றுள்ளார். ஆனாலும், அவ்வப்போது சில வேலைகளுக்காக சுப்ரமணியத்தை ஆனந்தா அழைத்து பயன்படுத்திக்கொள்வாராம்.
இதையும் படிங்க:
பாம்புகள் கடிப்பது ஏன்? கடித்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?
இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறது. அக்கட்சியின் தேசிய செயலாளரும் சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நரா லோகேஷ், எம்எல்சி ஆனந்தாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள அவர், ஜெகன் மோகன் ஆட்சியில் ஆந்திரா மாபியா மாநிலமாக மாறி பிகாரை விட மோசமான நிலையில் உள்ளது என குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.