பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 50 வரை குறைக்க வேண்டும் என்றும், உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் மீண்டும் விலை ஏறும் என்றும் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் மீதான வரியை ரூ. 10-ம் குறைத்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பையும், விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலுபிரசாத் யாதவ் கூறியதாவது-
கலால் வரியை குறைப்பது மட்டும் சரியான நடவடிக்கையாக இருக்காது. மிக குறைந்த அளவே வரியை குறைத்திருக்கிறார்கள். இதனை லிட்டருக்கு ரூ. 50 வரை குறைக்க வேண்டும். உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் மீண்டும் பெட்ரோல், டீசலின் விலை உயரும். இவ்வாறு அவர் கூறினார். பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், 'பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 70-க்கும் குறைவாக கொண்டு வரப்பட வேண்டும் என்று பாஜக முன்பு போராட்டம் நடத்தியது. ஆனால் இப்போது இரண்டையும் ரூ.100-க்கும் அதிகமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை ரூ. 70-க்கும் குறைவாக கொண்டுவரப்பட வேண்டும்' என்றார்.
Also read: பெட்ரோல், டீசல் விலையில் கூடுதலாக 7 ரூபாய் குறைத்த கர்நாடகா, புதுவை அரசுகள்!
நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து பெட்ரோல், டீசலின் விலை படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தின்போது, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 100யை கடந்தது. அதன்பின்னர் விலை ஏறுமுகத்தில் காணப்பட்டதால் அன்றாடம் வாகனத்தை பயன்படுத்துவோர் அதிர்ச்சிக்குள்ளாகினர். தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு ரூ. 3-யை குறைத்து மாநில அரசு நடவடிக்கை எடுத்தது.
இருப்பினும், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தொடர்ந்து அதிகரித்து வந்தன. டீசல் விலை லிட்டருக்கு ரூ. 102-யை கடந்ததால் மற்ற பொருட்களின் விலையும் உயரும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக விமர்சனங்கள் எழத் தொடங்கின. நேற்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 106.76-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ. 102.59-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாலை பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ. 5-ம், டீசல் மீதான வரியை ரூ. 10-ம் குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, சென்னையில் இன்று பெட்ரோல் ரூ. 101.40-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ. 91.43-க்கும் விற்பனையாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.