கிறிஸ்துவ பள்ளியில் ஏழை மாணவர்களை மதமாற்றம் செய்ததாக தகவல் பரவிய நிலையில் நூற்றுக்கணக்கில் திரண்ட இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி வளாகத்தில் புகுந்து கல் எரிந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
வன்முறை நடந்த நேரத்தில் பள்ளியில் மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், மாணவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அதே நேரத்தில் பள்ளியில் மதமாற்றம் நடந்ததா என விசாரணை தொடங்கியுள்ளது. பாதுகாப்புக்காக பள்ளியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கன்ச் பசோடா எனும் பகுதியில் செயிண்ட் ஜோசஃப் என்ற கிறிஸ்துவ பள்ளி செயல்பட்டு வருகிறது. கிறிஸ்துவ மிஷனரியால் நடத்தப்பட்டு வரும் இந்த பள்ளியில் பயிலும் இந்து மதத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் 8 பேர் அண்மையில் கிறிஸ்துவத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பான புகைப்படங்கள் சில உள்ளூர் செய்தி நிறுவனங்களிலும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வெளியானது. இதனால் இந்து அமைப்புகள் ஆவேசமடைந்தன.
Also read: பீகார் கொரோனா பரிசோதனை பட்டியலில் மோடி, அமித்ஷா, பிரியங்கா சோப்ரா பெயர்கள் இடம்பெற்றதால் சர்ச்சை!
நேற்று (டிச 6) மாலை பஜ்ரங் தளம் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் போன்ற இந்து அமைப்புகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அந்த பள்ளிக்குள் சென்று கல்வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் பள்ளியில் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தினர். கல்வீச்சு நடத்தப்பட்டதால் பள்ளிக் கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தது.
சம்பவம் நடைபெற்ற போது அங்கு +2 மாணவர்களுக்கு கணிதத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. கண்ணாடிகள் நொருங்கி தேர்வு அறைக்குள் விழுந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவர்களை நிர்வாகத்தினர் பத்திரமான இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.
Also read: பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ரவுடிக்கு தர்ம அடி கொடுத்த பெண்கள்
பள்ளியின் தலைவரான ‘சகோதரர் அந்தோனி’ மதமாற்றம் செய்யப்பட்டதாக வெளியான தகவலை மறுத்தார். தங்கள் பள்ளியிலோ அல்லது அது சார்ந்த தேவாலயத்திலோ மதமாற்றம் நடைபெறவில்லை என கூறினார். இந்த தாக்குதலால் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதாரமாகியிருப்பதாகவும் இது போன்ற சம்பவம் ஏற்படும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக காவல்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும், சிபிஎஸ்இ மண்டல அலுவலகத்துக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தும் யாரும் சரியான நேரத்தில் செயல்படவில்லை என கூறினார்.
பஜ்ரங் தளத்தின் உள்ளூர் தலைவரும் தாக்குதலில் கலந்து கொண்டவருமான நிலேஷ் அகர்வால் கூறுகையில், “மாநில அரசும் உள்ளூர் நிர்வாகமும் இது குறித்து விசாரிக்கட்டும். தவறு நடந்திருப்பது உறுதியானால் இந்த பள்ளியை இடித்துத் தள்ள வேண்டும். பள்ளி அமைந்திருக்கும் நிலத்தை ராஜேஷ் மாத்தூர் என்ற கொடையாளர் மருத்துவமனை அமைக்க தான் கொடுத்தார். ஆனால் இன்று தவறான காரணங்களுக்காக இந்த இடம் பயன்படுத்தப்படுகிறது. அவரிடம் நிலத்தை மீட்டெடுக்க வலியுறுத்துவோம் என்றார்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி கூறுகையில் பள்ளி வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணை ஏற்கனவே தொடங்கியுள்ளது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.