கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் இந்தியாவில் மருத்துவமனைகளும், மயானங்களும் நிரம்பி வழிவதை பார்க்க முடிகிறது. தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் புதிய உச்சங்களை எட்டிய நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் 3.60 லட்சம் பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க முடியாமல் மருத்துவ கட்டமைப்பு சுருங்கிவரும் நிலையில் தன்னெழுச்சியாக பலரும் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் கொரோனா நோயாளிகளுக்காக 1,000 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் விரைவில் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளது. ஆக்ஸிஜன் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் உருவாக்கப்படும் இந்த மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக சிசிக்கை மேற்கொள்ளப்படும் என ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஜாம்நகரில் 1000 படுக்கைகளுடன் உருவாக்கப்பட்டு வரும் சிறப்பு கொரோனா மருத்துவமனை பணிகளை ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்த ஊக்கம் அளித்தார்.
குஜராத் மாநிலம் ஜாம்நகர், துவாரகா, காம்பலியா, போர்பந்தர் மற்றும் சவுராஷ்டிராவின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இதன் மூலம் பலனடைவார்கள் என ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. முதலில் 400 படுக்கைகளுடன் கூடிய மையமானது ஜாம்நகரில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மையத்தில் ஒரு வார காலத்திற்குள் ஏற்படுத்தப்படும் எனவும் ஜாம்நகரின் வேறு ஒரு பகுதியில் 600 படுக்கைகளுடன் கூடிய கொரோனா மையம் அடுத்த இரண்டு வார காலத்திற்குள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
இம்மையங்களில் தேவையான மனிதவளம், மருத்துவ உபகரணங்கள்/கருவிகள், ஆக்ஸிஜன், சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் என அனைத்து செலவையும் ரிலையன்ஸே ஏற்கும் எனவும் இம்மையத்திற்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்களை மாநில அரசு பணியமர்த்தும் எனவும் ரிலையன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறப்பு கொரோனா மருத்துவமனை பணிகளை ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய மனைவியும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவருமான நீதா அம்பானி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இது தொடர்பாக ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனின் நிறுவனர் மற்றும் தலைவர் நீதா அம்பானி கூறுகையில், “இந்தியா தற்போது 2வது கொரோனா அலையுடன் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு நாளும் எங்களால் முடிந்த எல்லா வழிகளிலும் உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். கூடுதல் சுகாதார வசதிகள் காலத்தின் மிக முக்கியமான தேவைகளில் ஒன்றாகும்.
கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை மேற்கொள்வதற்காக ஆக்ஸிஜன் வசதி கொண்ட 1,000 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு கொரோனா சிகிச்சை மையத்தை குஜராத்தின் ஜாம்நகரில் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் கட்டமைக்க உள்ளது. முதலில் ஒரு வார காலத்திற்குள் 400 படுக்கைகளும், அடுத்த 2 வாரத்தில் மேலும் 600 படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்படும். இந்த மருத்துவமனையில் தரமான சிகிச்சை இலவசமாக அளிக்கப்படும். இந்த பெருந்தொற்று பரவல் ஏற்பட்டதில் இருந்தே ரிலையன்ஸ் அறக்கட்டளை நமது சக இந்தியர்களுடன் ஒற்றுமையுடன் தோளோடு தோளோடு நிற்கிறது. விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்ற நாங்கள் தொடர்ந்து அயராது உழைப்போம். ஒன்றாக நம்மால் முடியும், இந்த போராட்டத்தில் வெற்றி பெறுவோம்” இவ்வாறு நீதா அம்பானி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்காக பல்வேறு உதவிகளை ரிலையன்ஸ் குழுமம் சார்பில் அதன் தலைவர் முகேஷ் அம்பானி செய்து வருகிறார். நாட்டிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் 875 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவமனை ஒன்றை முகேஷ் அம்பானி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: COVID-19 Second Wave, Nita Ambani, Reliance, Reliance Foundation