தலைமைச் செயலகம் என்ன சுற்றுலா பயணியர் விடுதியா..?- முதல்வருக்கு பறந்த புகார்
தலைமைச் செயலகம் என்ன சுற்றுலா பயணியர் விடுதியா..?- முதல்வருக்கு பறந்த புகார்
புதுச்சேரி
புதுச்சேரி தலைமைச்செயலக வளாகத்தில் வாடகையின்றி வர்த்தக உரிமம், உணவு பாதுகாப்புத்துறை உரிமம் இன்றி ஹோட்டல், டீக்கடைகள் நடத்த அனுமதி தந்துள்ளது RTI மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு தூதரகம் எதிரே எந்தவித பாதுகாப்பும் இல்லாத உணவகங்களுக்கு அனுமதி அளித்துள்ளது குறித்து ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
புதுச்சேரி தலைமைச்செயலகத்தின் வடக்குபுறம் சுற்றுலா துறையின் லே-கபே(Le cafe) செயல்பட்டு வந்தது. அதன்பின்னர் ஊழியர்களுக்கான கேன்டீன் என்ற பெயரில் தலைமைச் செயலகத்தின் உள்புறம் ஒரு கேன்டீன் திறக்கப்பட்டது. பின்பு சில நாட்களில் நடைபாதை முழுவதும் சைவ-அசைவ உணவகம், டீக்கடை என ஒவ்வொரு கடைகளாக செயல்படத் தொடங்கியது. இது பற்றி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல் பெற்ற ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி அதை ஆளுநர், முதல்வரிடம் புகாராக தந்துள்ளார்.
அந்த மனுவில்,புதுச்சேரி தலைமைச்செயலக இடம் கடந்த 27.06.2019 முதல் புதுச்சேரி அசோக் ஹோட்டல் கார்ப்பரேஷனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு வாடகை எதுவும் வசூலிக்கப்படுவதில்லை, லாபத்தில் பங்கு என்கிற ஒப்பந்த அடிப்படையில் இடம் தந்துள்ளதாக தலைமைச்செயலக அதிகாரிகள் தகவல்கள் தந்துள்ளனர்.
இந்த கடைகள் தலைமைச்செயலக இடத்திலும் பிரெஞ்சு தூதரகம் எதிரேயும் அமைந்துள்ளது.புதுச்சேரி கடற்கரைக்கு வெளி மாநில சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வந்து செல்லும் நிலையில் உச்சக்கட்ட பாதுகாப்பில் உள்ள பிரெஞ்சு தூதரகம் எதிரே எந்தவித பாதுகாப்பும் இல்லாத இதுபோன்ற உணவகங்களுக்கு அனுமதி அளித்துள்ளது ஏன் என்ற கேள்வி எழுப்பியுள்ளார்.
தலைமைச் செயலக வளாகத்தில் லாபத்தில் பங்கு அடிப்படையில் உணவகம் நடத்த ஒப்பந்தம் செய்துக்கொள்ள தலைமைச் செயலகம் என்ன சுற்றுலா பயணியர் விடுதியா..? என்று கேட்டுள்ள சமூக ஆர்வலர், தலைமைச் செயலகத்தின் ஒருபுறம் புத்தர் சிலை அமைத்துவிட்டு, மறுபுறம் அசைவ உணவகத்திற்கு அனுமதி அளித்துள்ளது தலைமைச் செயலகத்தின் மாண்பையே குலைத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் புதுச்சேரி அசோக் ஹோட்டல் நிர்வாக இயக்குநரும், அரசு செயலர் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால் தலைமைச்செயலக வளாகத்தில் இயங்கும் ஹோட்டல்களுக்கு வர்த்தக உரிமம், உணவு பாதுகாப்புத்துறை உரிமம் ஆகியவை இல்லை.
மேலும் ஒப்பந்தத்தில் கடைகள் நடந்த அளவீடுகள் இல்லை. அத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள ஹோட்டல் அசோக் தரப்பானது விருப்பம் போல் மேல் வாடகைக்கு கடைகளை வாடகைக்கு விட்டுள்ளது. இச்சூழலில் தலைமைச்செயலகத்திலுள்ள ஊழியர்களுக்கான கேன்டீன் மூடப்பட்டு அங்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதுபற்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.