பாடகி லதா மங்கேஷ்வர் மறைவுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்திய சினிமாவில் பல மொழிகளில் இன்றும் ரசிக்கும் படியான பல நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ள பிரபல பாடிகியான லதா மங்கேஷ்கர் இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்பட்டவர். பழம் பெரும் பாடகியான இவர் கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை ஓரளவு தேறிய நிலையில், நேற்று மாலை மீண்டும் மோசமானது. தொடர்ந்து, இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.
லதா மங்கேஷ்கர் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: லதா மங்கேஷ்கரின் மறைவு இந்தியாவிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.. பிரதமர் மோடி இரங்கல்!
அந்தவகையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், இந்தியாவின் இசைக் குயில் என்று போற்றப்பட்ட ‘பாரத ரத்னா’ திருமதி.லதா மங்கேஷ்வர் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளிப்பதாக உள்ளது.
தனது 13 வயதில் பாடத் தொடங்கி தொடர்ந்து 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மக்களின் மனதை தனது இன்னிசைக் குரலால் ஆட்சி செய்தவர். பல்வேறு இந்திய மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள அவர், இந்தியாவின் இசை ராணியாக வலம் வந்தவர். வேறொருவரை இட்டு நிரப்ப முடியாத வெற்றிடத்தை அம்மையாரது இழப்பு ஏற்படுத்தியிருக்கிறது. இது அம்மாயாரது திறமைக்கும் உழைப்பிற்கும் சான்று ஆகும்.
அம்மையாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்வர் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். தனது இனிய குரல் வளத்தால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இசை ரசிகர்களின் அனைவரின் நெஞ்சத்திலும் நிறைந்திருந்தார்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.