புதுச்சேரி லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் கங்கையம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் 62 வயதான சாம்சன் என்ற விநாயகம். கட்டிட தொழிலாளியான இவர் தனது வீட்டில் தெரு நாய்களை வளர்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் 21 வயதான பிரதாப் பெயின்டிங் வேலை பார்த்து வந்தார். பிரதாப் தனது நண்பர்களுடன் தெருவில் செல்லும் போது அவர்களைப் பார்த்து விநாயகம் வீட்டில் உள்ள நாய்கள் குரைப்பது வழக்கம்., பிரதாப், அவற்றைக் கல்லால் தாக்கிவிட்டு சென்று விடுவார். இதனால், பிரதாப்பிற்கும் விநாயகத்திற்கும் அடிக்கடி வாக்குவாதம், தகராறு நடந்து வந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில், பிரதாப் தனது நண்பர்கள் மூவருடன் தெருவில் நடந்து சென்றார். அப்போது அவர்களைப் பார்த்து விநாயகம் வீட்டருகில் நின்றிருந்த நாய்கள் குரைத்துள்ளன. ஆத்திரமடைந்த பிரதாப் கற்களை எடுத்து நாய்களைத் தாக்கியுள்ளார். நாய்கள் அலறியதும் சத்தம் கேட்டு விநாயகம் வீட்டில் இருந்து வெளியே வந்து பிரதாப்பிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் விநாயகம் கையில் வைத்திருந்த சிறிய கத்தியால் பிரதாப் நெஞ்சில் குத்தியுள்ளார். கத்தி பிரதாப்பின் இதயத்தில் ஆழமாகக் குத்தி காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது. இருந்தும் அதைக் கவனிக்காமல் பிரதாப் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.
நண்பர்கள் அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பிரதாப்பின் தந்தை அளித்த புகாரின் பேரில், வீட்டில் பதுங்கியிருந்த முதியவர் விநாயகத்தைப் போலீசார் கைது செய்தனர்.
நாயைக் கல்லால் தாக்கியதற்காக நடந்த சண்டையில் 21 வயது இளைஞரை 62 வயது முதியவர் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம், புதுச்சேரி லாஸ்பேட்டையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.