நரேந்திர மோடி, 2014-ம் ஆண்டு முதன்முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார். அப்போதிலிருந்து அவர் தொடர்ச்சியாக வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுவருகிறார். மோடி பிரதமராக பதவியேற்றதற்குப் பிறகு 60 நாடுகளுக்கு 108 முறை சுற்றப்பயணம் மேற்கொண்டுள்ளார். மோடி, வெளிநாடுகளிலேயே சுற்றிக்கொண்டிருக்கிறார் என்று எதிர்கட்சிகள் விமர்சனங்களையும் முன்வைத்தன. இதற்கிடையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அதனால், நாடுகளுக்கு இடையேயான விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. உலக அளவில் எந்த முக்கிய கூட்டங்களும் நடைபெறவில்லை. பிரதமர் நரேந்திர மோடியும் எந்த நாடுகளுக்கும் பயணம் செய்யாமல் இருந்துவந்தார். அவர், கடைசியாக 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிநாட்டுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
இந்தநிலையில், சுமார் 15 மாதங்கள் கழித்து வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார். இரண்டு நாள் பயணமாக அண்டை நாடான வங்க தேசத்துக்குச் சென்றுள்ளார். வங்கதேசத்தின் 50-வது ஆண்டு சுதந்திர தின விழாவில் பங்கேற்கவுள்ளார். மேலும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
வங்கதேச பயணம் குறித்த மோடியின் ட்விட்டர் பதிவில், ‘நம்முடைய அண்டை நாட்டு கொள்கையில் வங்கதேசத்துடனான நம்முடையான உறவு என்பது முக்கியமான தூண். அந்த உறவை ஆழமாக்கவும், பன்மைப்படுத்தவும் வேண்டும். பிரதமர் ஷேக் ஹசினாவின் சிறப்பான தலைமையில் வங்கதேசத்தின் மறக்க முடியாத வளர்ச்சிப் பயணத்துக்கு நம்முடைய ஆதரவு தொடரும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.