டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் 2 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் கூட்டத்திற்கு பிரதமர் மோடி ஊர்வலமாக சென்றார். அப்போது, காரின் கதவை திறந்து, நின்றபடியே சென்ற பிரமருக்கு மலர்த்தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு 9 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலும், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலும் நடைபெறவுள்ள நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர்கள் 35 பேர், 12 மாநில முதலமைச்சர்கள், 37 மாநிலங்களின் பாஜக தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், பலவீனமாக உள்ள வாக்குச்சாவடிகளை கண்டறிந்து கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தியதாக கூறினார். இந்த ஆண்டு பாஜகவுக்கு மிகவும் முக்கியமான ஆண்டு எனவும், ஆட்சியில் உள்ள மாநிலங்களில் அரசை பலப்படுத்த வேண்டும், ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் வரவுள்ள சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் ஜெ.பி.நட்டா கூறியதாக குறிப்பிட்டார். சட்டப்பேரவைத் தேர்தல்களில் பெறும் வெற்றி நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் எனவும் நிர்வாகிகளிடையே ஜெ.பி.நட்டா பேசியதாக ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெகாசஸ், ரஃபேல், அமலாக்கத்துறை, புதிய நாடாளுமன்ற கட்டடம், இடஒதுக்கீடு மற்றும் பணமதிப்பிழப்பு ஆகியவை குறித்து எதிர்க்கட்சிகள், பிரதமர் மீது அடிப்படை ஆதாரமின்றி குற்றம்சாட்டுவதாகவும், அதை சட்டப்படி எதிர்கொள்வோம் எனவும் தெரிவித்தார். மேலும், வரும் 20ம் தேதியுடன் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் பதவிகாலம் நிறைவடைய உள்ள நிலையில், பதவி நீட்டிப்பு குறித்து இந்த கூட்டத்தில் விவாதம் நடத்தப்படவில்லை எனவும் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.