காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தேர்தல் பிரசார வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இன்று சந்தித்து பேசியுள்ளார். அப்போது குஜராத் சட்டமன்ற தேர்தல், 2024 பொதுத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பின்போது ராகுல் காந்தி, பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் உடன் இருந்துள்ளனர். காங்கிரசில் பிரசாந்த் கிஷோர் இணைவார் என்று சில நாட்களுக்கு முன்பாக தகவல்கள் பரவிய நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது. காங்கிரசுக்காக கடந்த 2017-ல் நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பிரசாந்த் கிஷோர் பணியாற்றினார். இங்கு தோல்வியடைந்தாலும், அவர் பணியாற்றிய 2017 பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
தமிழ்நாட்டில் இந்த முறை திமுகவுக்காகவும், மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்காகவும் பிரசாந்த் கிஷோர் தேர்தல் பணியாற்றினார். இவ்விரு கட்சிகளும் ஆட்சியை பிடித்துள்ளன. இதன் தொடர்ச்சியாக இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள குஜராத் சட்ட மன்ற தேர்தலில் காங்கிரசுக்காக பணியாற்ற தயார் என்று பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார். இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில் பதில் ஏதும் அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்று நடந்துள்ள சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதேபோன்று 2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் கூட்டத்தின்போது பிரசாந்த் கிஷோர் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தன்னுடைய அடுத்த கட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து மே 2ம் தேதி அறிவிக்கப்போவதாக பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார். அவர் காங்கிரசில் இணைவாரா, அல்லது அந்த கட்சிக்காக பணியாற்றுவாரா என்பது விரைவில் தெரியவரும்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Prashant Kishor, Sonia Gandhi