தேர்தல் வந்துவிட்டாலே அரசியல் கட்சிகளின் விறுவிறுப்பான பிரசாரங்கள், மாபெரும் பொதுக்கூட்டங்கள் போன்ற பரபரப்பான சூழலுக்கு மத்தியில் சில சுவாரஸ்யமான நிகழ்வுகளும் அரங்கேறுவது உண்டு.
குறிப்பாக, எத்தனை முறை தோல்வியை தழுவியிருந்தாலும், மீண்டும், மீண்டும் போட்டியிட்டு அதையே பெருமையாக குறிப்பிடும் சுயேட்சை வேட்பாளர்கள் பலரை நாம் களத்தில் பார்க்க முடியும். தலைவர்களை போலவே முகத்தோற்றம் கொண்டவர்கள், தலைவர்களின் பெயரை கொண்டவர்கள் என பலர் தேர்தலில் போட்டியிடுவதோடு, தாம் வெற்றி பெறுவது உறுதி என்று மார்தட்டி சொல்வார்கள். அப்படியொரு நிகழ்வுதான் இது.
உத்தரபிரதேச மாநிலம், சஹாரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 56 வயதான அபிநந்தன் பதக். பார்ப்பதற்கு அச்சு அசல் பிரதமர் நரேந்திர மோடி போலவே இருக்கும் இவர், ரயில்களில் வெள்ளரிக்காய் வியாபாரம் செய்து வருகிறார். தற்போது நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அபிநந்தன் பதக் போட்டியிட முடிவு செய்துள்ளார். அதேசமயம், பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்ட போதிலும், தனக்கு எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை என்று கூறுகிறார் இவர்.
இதையும் படியுங்கள் : மாற்று திறனாளி நபரை பணிக்கு அமர்த்தி வாக்குறுதியை காப்பாற்றிய ஆனந்த் மஹிந்திரா.! பாராட்டும் நெட்டிசன்கள்
இதுகுறித்து அபிநந்தன் பதக் பேசும்போது, “லக்னோ தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு கடிதம் எழுதினேன். ஆனால், எனது கடிதத்திற்கு அவர்கள் பதில் அளிக்கவில்லை.
நானொரு மோடி பக்தர். பாஜக வேண்டுமானால் என்னை புறக்கணித்து இருக்கலாம். ஆனால், நான் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதோடு, யோகி ஆதித்யநாத் இரண்டாம் முறையாக முதல்வராக பதவியேற்க உறுதுணையாக இருப்பேன். மோடி மற்றும் யோகி ஆகிய இருவருமே ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். பொது மக்களுக்காக தன்னலமின்றி உழைக்கும் அவர்களது அர்ப்பணிப்பு உணர்வை நான் பாராட்டுகிறேன்.
இதையும் படியுங்கள் : சென்னை ஆழ்கடலில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள்!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற போது, பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய நான் அங்கு பயணம் செய்தேன். ஆனால், அப்போது பதவியில் இருந்த முதல்வர் ரமன் சிங், என்னை துரத்தி அடித்ததோடு, ஒரு நாள் தங்குவதற்கு கூட இடம் கொடுக்கவில்லை. போலி மோடி எல்லாம் எனக்கு தேவை இல்லை என்று ரமன் சிங் கூறினார். எனது கோபமே அவரை பதவியில் இருந்து தூக்கி எறிந்து விட்டது.
குடும்பத்துக்கு பொருளாதார ரீதியாக நான் பெரிதும் உதவி செய்ய முடியவில்லை என்ற காரணத்தால் எனது மனைவி மீரா பதக் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 1999ஆம் ஆண்டில் சஹாரன்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டபோது எனது பணம் எல்லாம் செலவழிந்து விட்டது. அதற்கு பிறகு பொருளாதார ஸ்திரத்தன்மையை நான் இழந்து விட்டேன்.
இதையும் படியுங்கள் : பிரதமர் மோடி திறந்து வைக்கும் ஸ்ரீராமானுஜசாரியா சிலை குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்!
எனக்கு மூன்று மகள்கள் உட்பட 6 குழந்தைகள் உள்ளனர். இதில் இருவரை தவிர மற்ற எல்லோருக்கும் திருமணம் ஆகிவிட்டது. எனது மனைவி, 2 மகன்களுடன் வசித்து வருகிறார். நான் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, என்னை என் மனைவி தொடர்பு கொள்ளவில்லை. நான் அரசியல் தலைவராக உருவெடுத்து சமூகத்துக்கு சேவை செய்ய நினைக்கிறேன்’’ என்றார் அவர். முன்னதாக, கடந்த 2014ஆம் ஆண்டில் மக்களவை தேர்தல் நடைபெற்ற போது, வாரணாசிக்கு பிரச்சாரத்திற்கு வந்த நரேந்திர மோடியை தாம் சந்தித்ததாக அவர் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.