முகப்பு /செய்தி /இந்தியா / நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில அரசுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில அரசுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

காங்கிரஸ் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி

காங்கிரஸ் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி

நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் 23 மாநில முதல்வர்கள், 3 துணைநிலை ஆளுனர்கள் மற்றும் 2 நிர்வாகிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

  • Last Updated :
  • Delhi, India

கோவிட் பெருந்தொற்று நோயிலிருந்து இந்தியா மீண்டு வருவதற்கு கூட்டாட்சி உணர்வுடன் அனைத்து மாநிலங்களின் கூட்டு முயற்சிகள் முக்கிய சக்தியாக இருந்ததாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். நிதி ஆயோக்கின் ஏழாவது நிர்வாகக் குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் நாட்டின் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்து. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.

கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து நிர்வாகக்குழுவின் முதல் நேரடி கூட்டம் இதுவாகும். 2021 கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் 23 முதல்வர்கள், 3 துணைநிலை ஆளுனர்கள் மற்றும் 2 நிர்வாகிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நெறிப்படுத்தினார்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “ஒவ்வொரு மாநிலமும் அதன் வலிமைக்கு ஏற்ப பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு முக்கிய பங்களித்தன. இது வளரும் நாடுகளுக்கு உலகத் தலைவராக இந்தியாவை முன்னோடியாகக் காட்ட வழிவகுத்தது. வள ஆதார குறைபாடுகள் இருந்தபோதிலும் சவால்களை உறுதியுடன் சமாளிக்க முடியும் என்பதை இந்தியா நிரூபித்தது. இதற்கான பெருமை மாநில அரசுகளுக்கே உரியது, அரசியல் ரீதியாக ஒத்துழைப்பதன் மூலம் மக்களுக்கு பொது சேவைகள் அடிமட்ட அளவில் சென்று சேர்வதில் வழங்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக, இந்தியாவின் அனைத்து தலைமைச் செயலாளர்களும் ஒரே இடத்தில் ஒன்று கூடி, மூன்று நாட்களுக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை விவாதித்தனர். இந்த கூட்டு செயல்முறை இந்த கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்க வழிவகுத்தது" என்றார்.

இந்த ஆண்டு, நிர்வாககுழு நான்கு முக்கிய நிகழ்ச்சி நிரல்களை விவாதித்தது:

  • பயிரை பல்வகைப்படுத்துதல் மற்றும் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் இதர விவசாயப் பொருட்களில் தன்னிறைவை அடைதல்
  • பள்ளிக் கல்வியில் தேசிய கல்விக் கொள்கையை (NEP) செயல்படுத்துதல்
  • உயர்கல்வியில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துதல் மற்றும்
  • நகர்ப்புற நிர்வாகம்

மேற்கூறிய அனைத்து விஷயங்களின் முக்கியத்துவத்தையும், குறிப்பாக நவீனமயமாக்கப்பட்ட விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் உணவு பதப்படுத்துதல் ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் தன்னிறைவு அடையவும், விவசாயத் துறையில் உலகளாவிய தலைவராகவும் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் எடுத்துரைத்தார். நகர்ப்புற இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் எளிமையாக வாழ்வதற்கும், வெளிப்படையான சேவை வழங்குவதற்கும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விரைவான நகரமயமாக்கல் பலவீனத்திற்குப் பதிலாக இந்தியாவின் பலமாக மாறும் என்றார்.

தனது நிறைவுரையில் பிரதமர் மோடி, "ஒவ்வொரு மாநிலமும் வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இறக்குமதியைக் குறைத்தல், ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் வாய்ப்புகளை அடையாளம் காண்பதில் மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் முடிந்தவரை உள்ளூர் பொருட்களை பயன்படுத்த மக்களை ஊக்குவிக்க வேண்டும். ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கை தேவை. நமது பொருளாதார நிலையை வலுப்படுத்துவதற்கும், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கும் இது மிகவும் முக்கியமானது,” என்றார்.

இதையும் படிங்க: வேலை செய்யுங்கள் அல்லது விருப்ப ஓய்வு பெற்று வெளியேறுங்கள்..பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் அடுத்த 25 ஆண்டுகளுக்கான தேசிய முன்னுரிமைகளை வரையறுக்கும் என்ற பிரதமர் இன்று நாம் விதைக்கும் விதைகள் 2047 இல் இந்தியா அறுவடை செய்யும் பலன்களை வரையறுக்கும் என்றார்.

top videos

    இந்த கூட்டத்தில் பிரதமரின் முதன்மை செயலாளர், நிதி ஆயோக் துணைத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் தலைமை செயல் அதிகாரி, அமைச்சரவை செயலாளர், முக்கிய அமைச்சகங்களின் செயலாளர்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    First published:

    Tags: Niti Aayog, PM Modi