காதலர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், காதலியுடன் கொண்டாடிய தனது கணவரை மனைவி கையும் களவுமாக பிடித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ரோஜாக்கள், சாக்லேட்கள், பரிசுப்பொருட்கள் என்று காதலர்கள் தங்களது காதல் அன்பை ஒருவருக்கொருவர் பறிமாறிக்கொள்கின்றனர்.
இந்த நிலையில், காதலியுடன் காதலர் தினத்தை கொண்டாடிய கணவரை மனைவி கையும் களவுமாக பிடித்துள்ள சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. இன்று காலை தலைநகர் பாட்னாவில் உள்ள பைலே சாலையில், தனது கணவர், வேறு ஒரு பெண்ணுடன் இரு சக்கர வாகனத்தில் செல்வதை கண்டறிந்த மனைவி அவர்களை விரட்டிப் பிடித்துள்ளார்.
ஒரு பக்கம் காதலி, ஒரு பக்கம் மனைவி என்று பொறியில் சிக்கிய எலியாக கணவர் தவிக்க, அவரை வார்த்தைகளால் மனைவி அர்ச்சித்துள்ளார். சாலையில் களபேரம் நடப்பதை அறிந்த போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
போலீசாரிடம் அந்த மனைவி கூறுகையில், “மூன்று ஆண்டுகளுக்கு முன் எங்களுக்கு திருமணம் ஆனது. 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் வரை மகிழ்ச்சியாகத்தான் இருந்தோம். பின்னர் அவர் தன்னை மாற்றிக்கொண்டார்” என்று தெரிவித்துள்ளார்.
கணவரிடம் விசாரிக்கையில், காதலர் தினம் என்பதால் தனது காதலியை வெளியே அழைத்துச் சென்றதாக கூறியுள்ளார். விவகாரம் தீராத நிலையில், மூவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கணவர் - மனைவி இருவரும் சமாதானப் போக்கிற்கு வரவில்லை என்றால், மனைவியின் புகாரின் அடிப்படையில் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.