நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியபோது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மதியம் வரை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக பேசிய பிரதமர் மோடி, எந்தவொரு விவகாரத்திற்கும் பதில் சொல்வதற்கு அரசு தயாராக இருப்பதாகவும், நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். புதியவகை கொரோனா வைரஸான ஒமைக்ரான் குறித்தும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்கள், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதன்பின்னர் மக்களவை தொடங்கியபோது, பல்வேறு பிரச்னைகளை கிளப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டார்கள். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நாடாளுமன்ற செயலகங்கள் சார்பில் இரங்கல் தெரிவிக்க வேண்டும், இழப்பீடுகள் அறிவிக்க வேண்டும் என திமுக உறுப்பினர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சபாநாயகர் ஓம் பிர்லா மதியம் 12.20 வரை வரை அவையை ஒத்தி வைத்தார்.
குளிர்கால கூட்டத் தொடரின்போது மொத்தம் 36 மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளான இன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதாவை தாக்கல் செய்யப்படவுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Loksabha, Parliament