சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையை காண ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் கூட்டம் அலை மோதுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் முதல் சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனிடையே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஐப்பசி மாத பூஜைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசன் வரும் 16-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக முந்தைய நாளான 15-ஆம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது.
இந்நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியது.
முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே சீசன் முழுமைக்கான தரிசன முன்பதிவு நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வார நாட்களில் 1000 பேரும் வார இறுதி நாட்களில் 2000 பேர் மற்றும் மண்டல, மகர விளக்கு பூஜை நாட்களில் 5000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என அய்யப்ப பக்தர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.