தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் மொத்தமுள்ள 60 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் 3,337 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்ட நிலையில், காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்கள், வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றினர். முன்னாள் முதலமைச்சர்களான மானிக் சர்கார், பிப்லப் தேவ் உள்ளிட்டோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
சுமார் 28,13,000 வாக்காளர்கள் கொண்ட திரிபுரா மாநிலத்தில், 81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக 55 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான ஐபிஎப்டி ஐந்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரசும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் 46 தொகுதிகளிலும் காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் சுயேச்சைக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனிடையே தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வாக்குபதிவு நாளில் பாஜக மற்றும் காங்கிரஸ் டிவிட்டர் வாயிலாக பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக இரண்டு கட்சிகளும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Congress, Election commission of India, Tripura