தேநீர் போட்டுத்தர மறுத்ததால் மனைவியை கணவன் சுத்தியலால் மண்டையில் அடித்து கொன்ற வழக்கில் கணவரின் கொலைக்குற்றத்தை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது, இந்தத் தீர்ப்பு பரவலாக வரவேற்பு பெற்று வருகிறது.
தந்தை தன் தாயைக் கொலை செய்ததாக 6 வயது மகளே சாட்சியாக வந்து வாக்குமூலம் அளித்ததை ஏற்ற உயர் நீதிமன்றம் பாராட்டியதோடு குழந்தையின் சாட்சியத்தை நம்பாமல் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்று கூறியுள்ளது.
சோலாப்பூர் மாவட்டத்தின் பந்தர்பூரைச் சேர்ந்த சந்தோஷ் அக்தர் (35) தன் மனைவி தனக்கு டீ போட்டுத்தர மறுத்ததால் மண்டையில் சுத்தியலால் அடித்தார். இதனால் தலையில் பலத்த காயம்பட்ட அந்தப் பெண் பரிதாபமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்த வழக்கில் 2016-ம் ஆண்டு கோர்ட் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தது. இப்போது அந்தத் தண்டனை சரிதான் என்று தீர்ப்பளித்தது.
டிசம்பர் 2013 அன்று கணவனுக்கு டீ போட்டுத் தர மறுத்து வெளியே செல்ல வேண்டும் என்று மனைவி கூறியதாகவும் இதனையடுத்து அது எப்படி கணவன் கேட்டு மனைவி இல்லை என்று மறுக்கலாம் என்று மண்டையில் சுத்தியலால் தாக்கினார். மருத்துவமனையில் ஒருவாரம் சிகிச்சை பெற்று பலனளிக்காமல் பலியானார் மனைவி. மனைவியை தலையில் அடித்து விட்டு பிறகு அவரை குளிப்பாட்டி, வீட்டைச் சுத்தம் செய்து ரத்தக்கறையைத் துடைத்து விட்டு மருத்துவமனைக்கு அப்பாவியாக அழைத்துச் சென்றார் சந்தோஷ் அக்தர்.
தனக்கு டீ போட்டுத் தராததால் ஆத்திரம் அடைந்ததாக அவர் தன் வாதத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் தண்டனையை உறுதி செய்த நீதிபதி ரேவதி மொகித்தே தேரே ‘டீ போட்டுத் தர மறுத்தது கொலை செய்யும் அளவுக்கான ஒரு தூண்டுதலாக எடுத்துக் கொள்ள முடியாது, இதனை ஒரு காரணமாக ஏற்றுக் கொள்ள முடியாது
இதனை கண்ணால் பார்த்த சிறு குழந்தையின் மனவலியை நாம் கருணையுடன் அணுக வேண்டும். இந்த நிலையில் குழந்தையின் வாக்குமூலம் பெறுவதில் தாமதமானதை பெரிதாகக் கருதவில்லை.
மனைவி என்பது கணவனின் கைப்பாவையோ, தங்கள் இஷ்டத்துக்குப் பயன்படுத்தும் பொருளோ அல்ல, திருமணம் என்பது சமத்துவ அடிப்படையிலான ஒரு கூட்டு பந்தம். ஆனால் இது ஒருபோதும் அப்படியிருப்பதில்லை. இது ஆண்/பெண் சமத்துவமின்மையைக் காட்டுகிறது. ஒருதலைப்பட்சமான ஆணாதிக்க சமூகமே இதற்குக் காரணம். இந்த ஆணாதிக்கத் தன்மை திருமண உறவுகளில் ஆதிக்கம் செலுத்துவதும் இது போன்ற வழக்குகள் அடிக்கடி வருவதும் வழக்காமாகி வருகிறது.
இந்த பாலின பேதத்தில் ஒருதலைப்பட்சமாக வீட்டு வேலைகள் அனைத்தையும் பெண் தான் செய்ய வேண்டும் என்று எழுதப்படாத விதி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருமணத்தில் பெண்களின் உணர்வும் மதிக்கப்படுவதில்லை. பெரிய அளவில் பெண்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது ஆனால் இது அடிமைத்தனத்தில் போய் முடிகிறது. பெண்களின் சமூக பொருளாதார சூழலும் அவர்களை கணவன்களுக்கு எளிதாக அடிமையாக்கி விடுகிறது.
மத்தியகால மூடநம்பிக்கையான மனைவி என்பவள் கணவனின் சொத்து, உரிமை என்பதான மனநிலை முன்னேறிய இன்றைய சமுதாயத்திலும் நிலவுவது வேதனை இவை அனைத்தும் ஆணாதிக்க மனநிலையே.
மகளின் சாட்சியை நிராகரிக்க எதுவும் இல்லை. மகள் இயற்கையான சாட்சியாகிறார். தன் தாய் மண்டையை உடைத்து விட்டு அந்த இடத்தை தந்தை சுத்தம் செய்வதையும் குழந்தை பார்த்திருக்கிறது, இதனை ஏற்க முடியாமல் விட முடியுமா? என்று கூறி சந்தோஷ் அக்தரின் தண்டனையை உறுதி செய்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Court Case, Crime | குற்றச் செய்திகள், Murder, Murder case