பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்கும் வாகனங்கள் சுற்றுச்சூழலை மிக கடுமையாக மாசுபடுத்துவதால், இந்தியாவில் அவற்றின் பயன்பாட்டை குறைக்கும் முயற்சிகள் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசுடன், பல்வேறு மாநிலங்களின் அரசுகளும் இதற்கு தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எலெக்ட்ரிக் வாகனங்கள், சிஎன்ஜி வாகனங்கள் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முய்றசிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் சண்டிகர் நகரில் தற்போது மிகவும் அதிரடியான நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. சண்டிகர் நகரில், 2023ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதியில் இருந்து எலெக்ட்ரிக் அல்லாத இரு சக்கர வாகனங்களை பதிவு செய்யும் பணிகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சண்டிகரில் எலெக்ட்ரிக் அல்லாத டூவீலர்களை பதிவு செய்யும் பணிகள் அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளன.
அதாவது பெட்ரோல் மூலம் இயங்கும் டூவீலர்களை பதிவு செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவின்படி வரும் மார்ச் 31ம் தேதி வரை சண்டிகரில் பெட்ரோல் மூலம் இயங்கும் டூவீலர்கள் பதிவு செய்யப்படாது. எலெக்ட்ரிக் டூவீலர்களை மட்டுமே பதிவு செய்ய முடியும். எலெக்ட்ரிக் டூவீலர்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் மூலம் இயங்கும் டூவீலர்களை பதிவு செய்யும் பணிகளை நிறுத்தியுள்ளதால், சண்டிகர் மக்கள் எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு அதிகளவில் மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சண்டிகர் நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு என கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டுள்ளன. இதற்கிடையே எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக இன்னும் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளையும் சண்டிகர் நிர்வாகம் எடுத்து வருகிறது.
சண்டிகர் நகரில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு சாலை வரியில் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர ஹைப்ரிட் வாகனங்களுக்கும் கூட சாலை வரியில் இருந்து தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வாகனங்களின் பயன்பாட்டை பொதுமக்கள் மத்தியில் அதிகரிக்கும் நோக்கத்திலேயே இந்த நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு வருவதாக சண்டிகர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சண்டிகர் மட்டுமல்லாது டெல்லி உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி மக்களை திருப்புவதற்கான முயற்சிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை இயக்குவதற்கு தற்காலிகமாக தடை விதிப்பது, பதிவு செய்யும் பணிகளை நிறுத்துவது, எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு சலுகைகளை வாரி வழங்குவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே பெட்ரோல், டீசல் வாகனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் இறுதி அத்தியாத்தை நெருங்கி கொண்டுள்ளன. அடுத்தடுத்து வரும் தலைமுறைகளுக்கு பாதுகாப்பான சுற்றுச்சூழலை வழங்க வேண்டும் என்ற ஆர்வமும் பொதுமக்கள் மத்தியில் உள்ளதால், இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதேபோல் இந்திய சந்தையில் சிஎன்ஜி மற்றும் ஹைப்ரிட் வாகனங்களின் விற்பனையும் முன்னேற்ற பாதையில் செல்ல தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : ரோசாரியோ ராய்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.