டெல்லியில் வசிக்கும் நைஜீரிய வாலிபர் ஒருவர் 300க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. நைஜீரியாவின் லகோஸ் பகுதியில் பிறந்தவர் 38 வயதான கருபா கலும்ஜே. இவர் 2019ஆம் ஆண்டு இந்தியாவுக்கு 6 மாத விசா எடுத்து தொழில்முறை பயணமாக வந்துள்ளார். இந்தியா வந்த அவர் தன்னை வெளிநாட்டு வாழ் இந்தியராகக் கூறி திருமண இணையதளத்தில் விளம்பரப்படுத்தியுள்ளார். தனது பெயர் சஞ்சய் சிங் எனவும் தான் கனடாவில் வசிக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர் எனவும் கூறியுள்ளார்.
இவர், தனக்கு நல்ல மணப்பெண் தேடுவதாகக் கூறி பல பெண்களிடம் போலியாக பேசி அவர்களிடம் பணம் பறித்துள்ளார். இதுவரை இவர் 300க்கும் மேற்பட்ட பெண்களை குறிவைத்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளதாகவும், இதற்காக ஸ்மார்ட்டாக தெரியும் இந்திய ஆண்களின் பல புகைப்படங்களை ப்ரோபைல் பிக்சராக பயன்படுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர் மீது முதன்முதலாக உத்தரப் பிரதேசத்தின் மீரட் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். இவரிடம் திருமணம் செய்து கொள்வதாகப் பேசி பழகி எமோஷனல் பிளாக் மெயில் செய்து ரூ.60 லட்சம் வரை சுருட்டியுள்ளார் இந்த நைஜிரிய குடிமகன். அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கிய சைபர் கிரைம் காவல்துறை, கருபா தான் குற்றவாளி எனக் கண்டுபிடித்து அவர் தங்கி இருந்த தெற்கு டெல்லியில் கிசான் கர் பகுதியில் அவரை கைது செய்தது.
இவரின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இவரிடம் இந்தியாவில் தற்போது வசிப்பதற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. விசா காலத்தை மீறி இவர் இந்தியாவில் தங்கியுள்ளார். இவரிடம் இருந்து ஏழு செல்போன்கள், பேங்க் ஆப் தாய்லாந்து, பேங்க் ஆப் துபாய், இன்டர்போல், அமெரிக்க உள்துறை அமைச்சகம், அமெரிக்க உளவுத்துறை ஆகியவற்றின் பேரில் தயாரிக்கப்பட்ட மோசடி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க:
நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு!
இவர் மீது இபிகோ 460, 419,420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் தொடர்பான செயல்பாடுகள், பணப் பரிவர்த்தனைகளில் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் மோசடி பேர்வழிகளிடம் ஏமாற வேண்டாம் எனவும் சைபர் கிரைம் துறை எச்சரித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.