ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு (Draupadi Murmu) குடியரசுத் தலைவர் பதவிக்கு
பாஜக கூட்டணியின் வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார்.
64 வயதான முர்மு குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்த பதவிக்கு தேர்வாகும் நாட்டின் முதல் பழங்குடியினப் பெண் ஆவார். மேலும், இதற்கு முன் குடியரசுத் தலைவராக இருந்தவர்கள் அனைவரும் 1947க்கும் முன் பிறந்தவர்கள் என்பதால், முர்மு வெற்றி பெரும் பட்சத்தில் சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமையும் இவருக்கு கிடைக்கும்.
இந்நிலையில், குடியரசு தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்முவுக்கு மத்திய அரசு Z பிளஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது. இன்று காலை ஒடிசாவில் உள்ள ராய்ரங்பூர் ஜகன்னாதர் கோயிலில் வழிபாடு செய்தார் முர்மு. பலத்த பாதுகாப்புடன் அங்கு வந்த முர்மு, கோயில் வளாகத்தைத் துடைப்பத்தால் சுத்தம் செய்தார். பின்னர் ஆலய மணியை அடித்து வழிபாடு செய்த அவர், அங்கிருந்த நந்தி சிலையை ஆர கட்டித் தழுவினார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ஜேபி நட்டா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதேபோல், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்க வில்லை என்றாலும், தேர்தலில் தங்கள் மண்ணின் பெண்ணான முர்முவுக்கு நவீன் பட்நாயக் ஆதரவு தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, திரௌபதி முர்மு எளிதாக வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம்.
இதையும் படிங்க:
சிக்கலில் சிவசேனா.. காய் நகர்த்தும் பாஜக.. மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு
ஜார்க்கண்டின் முதல் பெண் கவர்னர், திரௌபதி முர்மு தனது அரசியல் வாழ்க்கையை கவுன்சிலராகத் தொடங்கினார், பின்னர் ராய்ரங்பூர் தேசிய ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவராக ஆனார். ஒடிசாவிலிருந்து இரண்டு முறை பாஜக சட்டமன்ற உறுப்பினராக இவர் இருந்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.