NAXAL ATTACK AMIT SHAH TO VISIT CHHATTISGARH HOLD HIGH LEVEL MEET VAI
சத்தீஸ்கரில் நடந்த துப்பாக்கிச்சண்டை.. நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் அமித்ஷா
அமித்ஷா
சத்தீஸ்கரில் நக்சல்களுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் உயிரிழந்த பாதுகாப்புப்படை வீரர்களின் உடல்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் மிகப்பெரிய சவாலாக திகழ்கிறார்கள். மாவோயிஸ்டுகளை ஒழிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
சத்தீஸ்கரில் சுக்மா-பிஜாபூர் எல்லையில் கடந்த சனிக்கிழமை நக்சல்களை தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த பாதுகாப்புப்படை வீரர்களை வனப்பகுதிக்குள் இழுந்துச் சென்ற நக்சலைட்டுகள், குடிக்க தண்ணீர் கூட கொடுக்காமல் சித்ரவதை செய்து கொலை செய்தனர். 22 பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழந்த நிலையில் 14 பேரின் உடல்கள் ஜக்தல்பூரிலும், சில வீரர்களின் உடல்கள் பிஜாபூரிலும் அஞ்சலிக்கு வைக்கப்பட்டன.
ஜக்தல்பூருக்கு விமானத்தில் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் வரவேற்றார். இருவரும் ஜக்தல்பூரில் வைக்கப்பட்ட 14 வீரர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து பாதுகாப்பு குறித்து உயர் அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். அப்போது இந்த சம்பவத்துக்காக மாவோயிஸ்டுகளுக்கு உரிய பதிலடி கொடுக்குமாறு அவர் கூறினார்.
முன்னதாக அமித் ஷா தனது டுவிட்டர் பதிவில், ‘பாதுகாப்பு படை வீரர்களின் தியாகத்துக்கு தலைவணங்குகிறேன். அவர்களது வீரத்தை தேசம் ஒருபோதும் மறக்காது. அமைதி, முன்னேற்றத்துக்கு எதிரான நமது போராட்டம் தொடரும்’ என கூறியிருந்தார்.