நூறு இளைஞர்களை என்னிடம் தாருங்கள், பாரத தேசத்தை மாற்றிக் காட்டுகிறேன் என்று அறைகூவல் விடுத்தவர் காவித்துணி அணிந்த புரட்சியாளர் விவேகானந்தர். இளைய சமூகம் தான் ஒரு நாட்டின் எதிர்காலம் என்று ஆணித்தனமாக நம்பிய விவேகானந்தர் பிறந்த நாளான ஜனவரி 12ம் தேதி, தேசிய இளைஞர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
ஜனவரி 12, 1863 இல் கொல்கத்தாவில் நரேந்திர நாத் தத்தாவாக பிறந்தவர் காலி கோவில் பூசாரி ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான பின்னர் விவேகானந்தர் ஆனார். வேதாந்தம் மற்றும் யோகாவின் இந்தியத் தத்துவங்களை கற்றறிந்த இவர் 1893 ஆம் ஆண்டு சிகாகோவில் நடந்த மாநாட்டில், "அமெரிக்காவின் சகோதரிகளே மற்றும் சகோதரர்களே..." என்று கூறி இந்தியாவின் கலாச்சாரத்தை உலக அரங்கில் மதிப்புமிக்கதாக மாற்றினார்.
சமயம் சார்ந்த கருத்துகள் மட்டுமல்லாது எழுந்திரு! விழித்தெழு! இலக்கை அடையும் வரை நில்லாதே என்று இளைஞர்களை ஊக்குவித்ததால் இன்றும் இளைஞர்களின் நாயகனாகத் திகழ்கிறார். இவரது போதனைகளை சமய பாகுபாடு இன்றி அனைவரும் கற்று வருகின்றனர். இன்று நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் விவேகானந்தர் சிந்தனை பற்றிய படிப்புகள் உள்ளன.
இந்நிலையில் 1984 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம் விவேகானந்தரின் பிறந்த நாளை தேசிய இளைஞர் தினமாக அறிவித்தது. 1985 முதல், ஆண்டுதோறும் இந்த தினத்தில் விவேகானந்தரின் போதனைகளை மதிக்கவும் அங்கீகரிக்கவும், அவரது சிந்தனைகளை இன்றைய இளைய சமூகத்திற்கு எடுத்துச்செல்லவும் பல்வேறு முன்னெடுப்புகள் செய்யப்படுகின்றன.
தேசிய இளைஞர் தினத்தில் (ராஷ்ட்ரிய யுவ திவாஸ்) நாடு முழுவதும் பேச்சு, இசை, இளைஞர் மாநாடுகள், கருத்தரங்குகள், யோகா ஆசனங்கள், விளக்கக்காட்சிகள், கட்டுரை எழுதுதல், குறும்பட போட்டிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் உட்பட பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்தோடு இணைந்து கொண்டாடும். அந்த வகையில் 2023 ஆண்டு விழாவை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் கர்நாடகாவுடன் இணைந்து நடத்துகிறது. இந்த நிகழ்வு ஜனவரி 12 முதல் ஜனவரி 16, 2023 வரை கர்நாடகாவின் ஹுப்பள்ளி-தர்வாடில் நடைபெறும்.
இந்த தனித்துவமான ஐந்து நாள் நிகழ்வின் போது, இந்தியா முழுவதிலுமிருந்து 7500 க்கும் மேற்பட்ட இளைஞர் பிரதிநிதிகள், அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு துறை நிபுணர்கள் கலந்துகொண்டு கருத்தரங்குகளை நடத்துவர். 2023 தேசிய இளைஞர் தினதிற்கான தீம் "விக்சித் யுவ-விக்சித் பாரத்." அதன் பொருள் வளர்ந்த இளைஞர்கள்- வளர்ந்த இந்தியா என்பதாகும்.
இந்நிகழ்வில் மாணவர் மைய ஆட்சி மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற தொடர்புடைய கருப்பொருள்கள் பற்றிய விவாதங்கள் நடைபெற உள்ளன. கேரளாவின் களரிபயட்டு, தமிழ்நாட்டின் சிலம்பம், பஞ்சாப்பின் கட்கா, மகாராஷ்டிராவின் மல்லகாம்ப் போன்ற பாரம்பரிய தற்காப்பு கலை நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.