நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி 2வது நாளாக இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜரானார்.
கடந்த 1938ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது "நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனம்". சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரசின் குரலாக ஒலித்து வந்த நிலையில் கடந்த 2008ம் ஆண்டு ரூ.90 கோடிக்கும் மேலான கடன் சுமையால் அந்நிறுவனம் மூடப்பட்டது. இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியால் தொடங்கப்பட்ட "யங் இந்தியா லிமிடெட்" என்ற நிறுவனம் 2010-ம் ஆண்டில் கையக்கப்படுத்தியது.
இதில் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் 1,057 பங்குதாரர்களுடன் எவ்வித ஆலோசனை செய்யாமல் 50 லட்சம் ரூபாய்க்கு தொடங்கப்பட்ட 'யங் இந்தியா' நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் 2,000 கோடி ரூபாய் வரை ஆதாயம் அடைந்துள்ளதாக கூறி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த பரிவர்த்தனைகளை அடிப்படையாக கொண்டு சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் சோனியா காந்தி, ராகுல்காந்தி மீது வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி, ராகுல் காந்தி கடந்த மாதம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். 5 நாட்களில் 50 மணி நேரத்துக்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடந்த 21ம் தேதி ஆஜராகி விளக்கம் அளித்தார். 3 மணி நேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றது. அதை தொடர்ந்து இன்று 2வது நாளாக அமலாக்கத்துறை முன்பு சோனியா காந்தி ஆஜரானார். சோனியா காந்தியுடன் அவரது மகள் பிரியங்கா காந்தியும் வந்தார்.
மேலும் படிக்க: வீட்டு நாயை குளிக்க வைக்க மறுத்த கன்மேனை சஸ்பெண்ட் செய்த எஸ்.பி.. அதிரடி காட்டிய ஐ.ஜி!
இதனிடையே சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.