டெல்லியில் அமலாக்கத்துறைக்கு எதிராக
காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறையினர் மோதியதில் தனக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு நிறுவிய நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையின் பங்குகள் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான யங் இந்தியா நிறுவனத்துக்கு கை மாறியதில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்க துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் நேரில் ஆஜராக அமலாக்கத் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி ராகுல் காந்தி நேற்று ஆஜரானார். அவரிடம் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதனிடையே, அமலாக்கத்துறையை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின்போது, காவல் துறையினர் தள்ளிவிட்டதில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் இடது விலா எலும்பு உடைந்ததாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் 10 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை.. இன்றும் ஆஜராக சம்மன்
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சிதம்பரம் , மூன்று பெரிய, முரட்டுத்தனமான போலீஸ்காரர்கள் உங்கள் மீது மோதும்போது முனைப்பகுதியில் மட்டும் பாதிப்புடன் நீங்கள் தப்புவது அதிர்ஷ்டம். விலா எழும்பு முனைப்பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதால், 10 நாட்களில் குணமாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது நலமுடன் இருப்பதாகவும், இன்று பணிக்கு திரும்ப உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.