புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி பிப்ரவரி 16ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு ஆளுநர் கிரண்பேடி தடையாக இருந்து வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் ஆளுநரை திரும்ப பெறக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையிலான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் முதலியார்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.
முதலமைச்சர் நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், ராஷ்ட்ரீய ஜனதாதள மாநில தலைவர் சஞ்சீவி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
பின்னர், நாராயணசாமி செய்தியாளர்கனிடம் கூறுகையில், ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெற கோரி ஜனவரி 26ஆம் தேதி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. ஆனால், மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆளுநர் கிரண்பேடியும் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. எனவே ஆளுநரை கண்டித்து வரும் வெள்ளிக்கிழமை அண்ணாசிலை அருகில் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கிறோம்.
குடியரசுத் தலைவரை சந்திக்க நேரம் ஒதுக்க கேட்டிருந்தோம். அவர் வருகிற 10-ஆம் தேதி நேரம் ஒதுக்கியுள்ளார். அன்றைய தினம் டெல்லி சென்று அவரை சந்தித்து கையெழுத்து இயக்கத்தின் மூலம் பெறப்பட்ட கையெழுத்துகளை ஒப்படைக்க இருக்கிறோம். அப்போது, மத்திய அரசு ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் அளிக்க இருக்கிறோம் என்று கூறினார்.
மேலும், மத்திய அரசு ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி இம்மாதம் 16ஆம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. மத்திய அரசு புதுச்சேரியை வஞ்சித்துவரும் நிலையில், ஆளுநர் கிரண்பேடி மாநில அரசுக்கு எந்தெந்த வழிகளில் தொல்லை கொடுத்து வருகிறார் என்பது குறித்தும், முழு அடைப்பு போராட்டம் குறித்தும் பொதுமக்களிடம் எடுத்து கூறுவதற்காக 14 மற்றும் 15ஆம் தேதிகளில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் தெருமுனை பிரசாரம் நடத்தப்படும்.
மேலும் படிக்க... இரண்டாம் உலகப் போர் வீரர் கேப்டன் டாம் மூர் காலமானார்
இந்த போராட்டத்திற்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று நாராயணசாமி கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.