நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தவொரு மதத்திற்கு எதிராகவோ, சர்ச்சையை தூண்டும் கருத்துகளை பேசுவதை தவிர்க்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தியுள்ளார்.
சபாநாயகராக ஓம் பிர்லா பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்த நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு ஓம் பிர்லா பிரத்தியேகப் பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் அவர் கூறியதாவது, 'மக்களவை சபாநாயகராக மூன்றாண்டுகள் நான் பணியாற்ற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி.
இந்த 17ஆவது மக்களவை எட்டு கூட்டத்தொடர்களாக சுமார் ஆயிரம் மணிநேரம் இயங்கியுள்ளது. விவாதம் மற்றும் ஆலோசனை ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்கள். அவையில் கலகலப்பாக பேச, கருத்து கூற உறுப்பினர்களுக்கு உரிமை உள்ளது. அதேவேளை, தேவையற்ற ஆக்ரோஷம், சத்தம் போன்றவற்றை உறுப்பினர்கள் மேற்கொள்ளக் கூடாது. மேலும், எதிர்த்தரப்பு மீது தேவையற்ற அவதூறுகளை பரப்பும் கருவியாக நாடாளுமன்றம் மாறி விடக்கூடாது' என்றார்.
அண்மை காலமாக நாடு முழுவதும் மத ரீதியான பேச்சு குறித்து எழுந்துள்ள சர்ச்சை குறித்து பதில் அளித்த ஓம் பிர்லா, 'மதம் தொடர்பாக பேசும் போது, எந்தவொரு மதத்தின் உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் புண்படுத்தும் விதமாக பேசக் கூடாது என்பதை எம்.பிக்கள் மனதில் கொள்ள வேண்டும். எந்தவொரு மதத்திற்கு எதிராகவும் சர்ச்சையை தூண்டும் விதமான கருத்துக்களை உறுப்பினர்கள் பேசக் கூடாது. நமது அரசியல் சாசனம் அனைத்து மதங்களையும் சமமாகவே கருதுகிறது' என்றார்.
இதையும் படிங்க: முதலமைச்சர், பிரதமர் பதவிகளுக்கும் டென்டர் விடுவீர்களா - அக்னிபத் திட்டம் குறித்து உத்தவ் தாக்ரே சாடல்
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மக்களவை உறுப்பினரான ஓம் பிர்லா, 2019ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி மக்களவை சபாநாயகராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.