இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், விமான பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை இந்திய விமான போக்குவரத்து ஆணையம் விதித்துள்ளது.
அதன்படி, விமான நிலையங்கள் மற்றும் விமானங்களில் முகக் கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்படுகிறது. இந்த விதியை பின்பற்றாதவர்கள் விமானத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் விமான நிலையத்திற்குள் முகக் கவசம் அணியாத பயணிகளுக்கு அபராதம் விதிப்பதுடன் அங்கு காவலில் இருக்கும் CISF காவலர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான நிலைய வாயிலில் கண்காணிக்கும் வீரர்கள் முகக் கவசம் அணியாதவர்களை உள்ள விடக் கூடாது, விமான நிலையத்திற்குள் அனைவரும் முகக்கவசம் அணிந்துள்ளார்களா என அவர்கள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து விமான நிலையங்களும் முறையாக தூய்மைப்படுத்தப்பட்டு, விமானப் பயணிகளுக்கு சானிடைசர்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இந்த விதிமுறைகளை மீறுவோரை பாதுகாப்பு படையினர் மாநிலங்களின் சட்டத்திற்கு ஏற்ப உள்ளூர் காவல்துறை உதவியுடன் நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாகவே தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், விமான நிலையத்தில் விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் டெல்லி உயர் நீதிமன்றம் விமானப் போக்குவரத்து ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாகவே விமானப் போக்குவரத்து ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதையும் படிங்க:
மாநிலங்களவைத் தேர்தலில் 16 இடங்களுக்கு கடும் போட்டி.. களைகட்டும் "கூவத்தூர் பாணி"
இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 7,240 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை கடந்த 48 மணி நேரத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பு ஆகியுள்ளது. நாட்டின் அதிக பாதிப்புகளை கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.