மகாராஷ்டிராவைச் சேர்ந்த நகை வியாபாரி ஒருவரின் கடையில் ஜிஎஸ்டி துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் தரைக்குள் பணத்தையும் சுவரில் வெள்ளியையும் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து 9.78 கோடி ரூபாய் பணம் மற்றும் 19 கிலோ வெள்ளி கைப்பற்றப்பட்டது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இயங்கிவரும் சாமுண்டா என்ற நகை வியாபார நிறுவனத்தின் வருமானம் கடந்த 2019-20 நிதி ஆண்டில் ரூ.22.83 லட்சமாக இருந்த நிலையில் மூன்றே ஆண்டுகளில் இது பன்மடங்கு அதிகரித்து தற்போதைய நிதியாண்டில் ரூ.1764 கோடியாக உயர்ந்துள்ளதை ஜி.எஸ்.டி. அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, அந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவற்றில் பெரும்பாலான இடங்கள் வணிகத்திற்கான இடங்களால ஜிஎஸ்டி துறையில் பதிவு செய்யப்படவில்லை. கல்பாதேவி பகுதியில் உள்ள சிறிய அலுவலகம் ஒன்றில் சோதனை செய்தபோது, தரைக்கு அடியில் இருந்து கட்டுக்காட்டாக பணமும், சுவரில் பதிக்கப்பட்டிருந்த வெள்ளி கட்டிகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் வீட்டின் முன் அனுமன் சாலிசா பாட திட்டம் - எம்.பி நவநீத் ராணா கணவருடன் கைது
கைப்பற்றிய பணத்தை எண்ணுவதற்கே அதிகாரிகளுக்கு கிட்டத்தட்ட 6 மணி நேரம் ஆகியுள்ளது. இரவு எண்ணத் தொடங்கி அதிகாலையிலேயே முடித்தனர். அதன்படி, ரூ.9.78 கோடி பணமும் 19 கிலோ வெள்ளியும் கைப்பற்றப்பட்டுள்ளது. பணம் கைப்பற்றப்பட்ட இடத்தின் உரிமையாளரும் குடும்ப உறுப்பினர்களும் பணம் மற்றும் வெள்ளி கட்டி குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளனர்.
இதையடுத்து அதிகாரிகள் அந்த அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். மேலும் இது தொடர்பாக வருமான வரித்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே இடத்தின் உரிமையாளர் தன்னை போலீசார் கைது செய்யாமல் இருப்பதற்காக முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.