ராஜஸ்தானில் 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தின் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்ட்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாக சென்று தற்போது ராஜஸ்தானை கடந்து வருகிறது. இந்த யாத்திரை அடுத்த ஆண்டு காஷ்மீரில் நிறைவடைய இருக்கிறது.
இந்த யாத்திரையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரபலங்களும் பங்கேற்று வருகின்றனர்.காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் ஒற்றுமை இந்தியா நடைபயணம் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியான அல்வார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் உரையாற்றினார்.
அப்போது, விலைவாசி உயர்வு பிரச்னை மிகவும் தீவிரமாக கவனிக்கப்பட வேண்டியது என்றார். இதனால், ராஜஸ்தானில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்பங்களுக்கும் 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என அறிவித்தார். ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை இந்த விலையில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார். அடுத்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அசோக் கெலாட் குறிப்பிட்டார்.
முன்னதாக, ராஜஸ்தான் மாநிலத்தின் சவாய் மாதோபூரின் படோதி பகுதியில் இருந்து புதன்கிழமை மீண்டும் தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரையில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கலந்துகொண்டு ராகுல் காந்தியுடன் சிறிது தூரம் நடந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: LPG, LPG Cylinder