மங்களூரு குண்டுவெடிப்புச் சம்பவத்தினை நடத்திய பயங்கரவாதி ஷாரிக் ஆபாச வீடியோக்களை இளைஞர்களுக்கு அனுப்பி தனது பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா மாநிலம் மங்களூருவில், ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஷாரிக் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வெடிகுண்டுகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக டிப்ளமோ படித்த அவர், பின்னர் மைசூருவில் ஒரு செல்போன் கடையில் சேர்ந்து செல்போன்களை பழுது பார்க்கவும், அதை நவீன முறையில் கையாளவும் பயிற்சி பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த சந்தர்ப்பங்களில் அவர் 10 செல்போன்களை வாங்கி இருக்கிறார். மேலும் பழுது பார்க்க வரும் செல்போன்களில் உள்ள ஆபாச வீடியோக்கள், அந்தரங்க வீடியோக்கள், புகைப்படங்கள், செல்போன் எண்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொண்டுள்ளார். அதை பயன்படுத்தி தான் பதிவிறக்கம் செய்த செல்போன் எண்களில் இருந்து குறிப்பிட்ட நபர்களை மட்டும் தேர்வு செய்திருக்கிறார்.
அவர்களது செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அவர்கள் பதில் அனுப்பியதும், அவர்களுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி வைத்திருக்கிறார். அந்த வீடியோக்களை பார்த்து தனது வலையில் விழும் இளைஞர்களை கொஞ்சம், கொஞ்சமாக ஷாரிக் மூளைச்சலவை செய்து பயங்கரவாத வீடியோக்களை அனுப்பி, அதன்மூலம் தனது அமைப்புக்கு ஆள்சேர்த்து நாசவேலையில் ஈடுபட பயிற்சி அளித்திருக்கிறார்.
இவ்வாறாக இவர் இதுவரை கர்நாடக கடலோர மாவட்டங்களில் மட்டும் 40 இளைஞர்களிடம் ஆபாச வீடியோக்களை காட்டி நேரில் சந்தித்து மூளைச்சலவை செய்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட பயிற்சி அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
அவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் வழங்கப்படுவது போல் பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும், அவர்களை வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்று குண்டுகளை வெடிக்க செய்து பயிற்சி அளித்ததும், வெடிகுண்டுகள் தயாரிப்பது, அவற்றை எவ்வாறு வைப்பது, வெடிகுண்டுகளை வைத்துவிட்டு அங்கிருந்து எப்படி தப்பிப்பது உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளித்ததாகவும், அவர்களுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் வெடிகுண்டு சம்பவங்களை அரங்கேற்ற திட்டமிட்டு இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது அந்த இளைஞர்கள் கர்நாடக கடலோர மாவட்டங்களில் சிலீப்பர் செல்களாக இருந்து பதுங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஷாரிக்கின் செல்போன்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். நேற்று முன்தினம் மாலையில் மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் தலைமையிலான போலீசார் பாதர் முல்லர் ஆஸ்பத்திரிக்கு சென்று, ஷாரிக்கிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் நேற்று காலையிலும் சுமார் 4 மணி நேரம் ஷாரிக்கிடம் விசாரணை நடத்தி தகவல்களை பதிவு செய்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bomb blast, Crime News, Mangalore