கர்நாடகாவில் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளை நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி கல்லூரி நிர்வாகம் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை எதிர்த்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடகாவில் ஹிஜாப் அணியும் பிரச்னை உடுப்பியில்தான் முதன் முதலில் வெடித்தது. இந்த போராட்டத்தின் தாக்கம் மாநிலம் முழுவதும் பரவியது. ஹிஜாப் விவகாரத்தில் தொடர்ந்த பதற்றமான சூழல் ஏற்பட்டதன் காரணமாக கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி முதல் கர்நாடகத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டது. இப்பிரச்னை தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரையில் மத அடையாளங்களை பிரதிபலிக்கும் உடைகளை அணிந்து பள்ளிக்கு வர மாணவர்களுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டன.
வடக்கு கர்நாடகாவின் விஜயபுராவில் உள்ள அரசு கல்லூரி ஒன்றுக்கு இஸ்லாமிய மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர். அப்போது, ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை வகுப்பறைக்குள் அனுமதிக்க கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது. இதற்கு முன்பாக இதே கல்லூரிகளுக்குள் ஹிஜாப் அணிந்த மாணவிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்டு அனுமதி மறுக்கப்பட்டதால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: நாம் யாரும் துருக்கியில் வசிக்கவில்லை - ஹிஜாப் விவகாரத்தில் இஸ்லாமிய மாணவிகள் தரப்பு வாதம்
வகுப்பறைக்குள் அனுமதிக்க மறுத்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகள் போராட்டத்தை தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர். இதேபோல், மேலும் சில கல்லூரிகளிலும் ஹிஜாப் அணிந்துவந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.