கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு நேற்று பள்ளிகளில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இன்று ஏராளமான மாணவிகள் பள்ளிகளையும், தேர்வுகளை புறக்கணித்தனர்.
கர்நாடகாவில் ஹிஜாப் அணியும் பிரச்னை உடுப்பியில்தான் முதன் முதலில் வெடித்தது. இந்த போராட்டத்தின் தாக்கம் மாநிலம் முழுவதும் பரவியது. ஹிஜாப் விவகாரத்தில் தொடர்ந்த பதற்றமான சூழல் ஏற்பட்டதன் காரணமாக கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி முதல் கர்நாடகத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டது. இப்பிரச்னை தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரையில் மத அடையாளங்களை பிரதிபலிக்கும் உடைகளை அணிந்து பள்ளிக்கு வர மாணவர்களுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இதனிடையே,கர்நாடகாவில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒருசில பள்ளிகளில் ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று குடகு பகுதியில் தலைக்கு ஹிஜாப் அணிந்து வந்த 35 மாணவிகள் பள்ளிக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து அவர்கள் பள்ளி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவமொகாவில் பள்ளித் தேர்வின்போது சில மாணவிகள் ஹிஜாபை அகற்ற மறுப்பு தெரிவித்தனர். இதேபோல் நேற்று பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்ட 13 மாணவிகள் இன்று வகுப்புகளையும் தேர்வுகளையும் புறக்கணித்தனர்.
இதையும் படிங்க: கணவருக்கு கல்லீரலை தானமாக வழங்கிய மனைவி... காதலர் தினத்தில் நெகிழ்ச்சி சம்பவம்..
கல்புர்கியில் உள்ள உருது பள்ளியில் 8, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட சிறுமிகள் திங்கள்கிழமை ஹிஜாப் அணிந்து பள்ளிக்குள் நுழைய அனுமதிக்கப்படாததால் வகுப்புகளைத் தவிர்த்தனர். இதனிடையே ஹிஜாப் தொடர்பான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.