கர்நாடகாவில் கல்வி நிலையங்களுக்கு ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதித்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அம்மாநில உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிவதற்கு கடந்த பிப்ரவரி மாதம் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வந்தனர். எனினும் அவர்கள் பள்ளி வளாகத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
பின்னர், கர்நாடகாவின் பிற பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களிலும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனிடையே, ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவியரில் சிலர் காவி துண்டு அணிந்து வரத் தொடங்கியதால் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், ஹிஜாப் தடையை எதிர்த்து மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்சித் மற்றும் நீதிபதி ஜேஎம் காஜி அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. ஹிஜாப் தடை தொடர்பான வழக்கில் இன்று காலை 10.30க்கு தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஏர் இந்தியாவின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் நியமனம்
விஜயபுராவில், பள்ளிகள், பல்கலைக்கழகங்களுக்கு முந்தைய கல்லூரிகள், பட்டயக் கல்லூரிகள் அல்லது பிற கல்வி நிறுவனங்களின் 200 மீட்டர் சுற்றளவுக்குள் எந்த வகையிலும் கூடுவது, போராட்டம் நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வெளியேயும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்தியா.. சர்வதேச விமான பயணக் கட்டணம் 50% குறைய வாய்ப்பு.!
தீர்ப்பு காரணமாக தக்ஷன கன்னடா டிசி இன்று அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். கல்புர்க்கி பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உடுப்பு, சிவமொக்காவில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.