எதிர்வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு தரவுள்ளதாக காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தெரிவித்துள்ளது. இது தேசிய அரசியல் வட்டாரத்தில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
ஜார்க்கண்ட் கூட்டணி அரசு
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை அம்மாநிலத்தின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி வைத்து எதிர்கொண்டது. தேர்தல் முடிவில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 30 இடங்களையும், காங்கிரஸ் 16 இடங்களையும் வென்று 81 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவையில் கூட்டணி ஆட்சி அமைத்தன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரான ஹேமந்த் சோரன் அம்மாநில முதலமைச்சரானார். எதிர்க்கட்சியான பாஜகவிடம் 25 இடங்கள் உள்ளன.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தியோகர் பகுதியில் புதிய விமான நிலையத்தை திறப்பதற்காக கடந்த 12ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார். அவரை வரவேற்ற அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், பிரதமர் பங்கேற்ற விழாவில் இணைந்து பங்கேற்றார். மேலும் விழாவில் பேசிய அவர், மத்திய அரசின் ஒத்துழைப்பு கிடைத்தால் நாட்டிலேயே மிகச் சிறந்த மாநிலமாக அடுத்த 5 ஆண்டுகளில் ஜார்க்கண்ட் உருவெடுக்கும். இது ஜார்கண்ட் வரலாற்றின் முக்கியத்துவம் வாய்ந்த நாள்.

மத்திய மாநில அரசுகளுக்கு இடையே கூட்டுறவு, ஒருங்கிணைப்பு ஏற்பட்டால்,வளர்ச்சி என்பது நிச்சயம் எனப் பேசினார். பிரதமர் மோடியை மேடையில் வைத்துக்கொண்டு முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இவ்வாறு பேசியது,தனி கவனத்தை பெற்றது.
பாஜக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு
இதனிடையே எதிர்வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளிப்பதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அறிவித்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா நாளை ஜார்கண்ட் மாநிலம் வந்து ஆதரவு கேட்கவிருந்தார். அதற்கு முன்னதாகவே இந்த அறிவிப்பை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வெளியிட்டுள்ளது. சுதந்திர இந்தியாவின் முதல் முறையாக பழங்குடியின பெண் குடியரசு தலைவராக வரவுள்ளதால் அவருக்கே ஆதரவு என ஹேமந்த் சோரனின் கட்சி தெரிவித்துள்ளது. இது எதிர்க்கட்சி வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது. அத்துடன் காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக்குள் மேலும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:
காமராஜர் கனிவும் அக்கறையும் கொண்ட சிறந்த நிர்வாகி - பிரதமர் மோடி புகழாரம்
ஏற்கனவே, மகாராஷ்டிராவில், காங்கிரஸ் அங்கம் வகித்த மகாவிகாஸ் அகாதி கூட்டணி உடைந்து சிவசேனா - பாஜக கூட்டணி அரசு அமைந்துள்ளது. தற்போது ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியும் மத்திய பாஜகவுடன் சுமூகமான போக்கை கையில் எடுத்துள்ளதால், ஜார்க்கண்ட் மாநிலம் கூட மகாராஷ்டிரா பாணியில் பயணிக்குமோ என அரசியல் நிபுணர்கள் கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலமானது பழங்குடியின மக்கள் மிகுதியாக வசிக்கும் மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.