ரிலையன்ஸ் அறக்கட்டளையால் நவி மும்பையில் உருவாக்கப்பட்டுள்ள ஜியோ பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் என நீடா அம்பானி அறிவித்துள்ளார்.
சந்தை மூலதனத்தால் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக திகழும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் (RIL) 44 வது ஆண்டு பொதுக் கூட்டம் (AGM) தற்போது தொடங்கியுள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஆண்டைப்போல்வே இந்த ஆண்டும் இரண்டாவது முறையாக காணொளி காட்சி வாயிலாக இக்கூட்டம் நடைபெற்றுவருகிறது.
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி, வருடாந்திர பொதுக்கூட்டத்தினை தொடங்கிவைத்து உரையாற்றிய ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸின் தலைவர் முகேஷ் அம்பானி, மிகவும் கடினமான இந்த காலத்தில் எங்கள் வணிக செயல்திறனை விட எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருப்பது ரிலையன்ஸ்-ன் மனிதாபிமான முயற்சிகள் தான் என பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், எங்கள் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கும் நாங்கள் அக்கறை செலுத்துகிறோம்.
எங்கள் வாடிக்கையாளர்கள், எங்கள் பங்குதாரர்கள் மற்றும் எங்கள் பாட்ட்னர்களுக்கும் நாங்கள் அக்கறை கொள்கிறோம்.
நாடு மற்றும் சமூகத்திற்காக நாங்கள் அக்கறை கொள்கிறோம்.
இந்த கிரகத்துக்கும், மக்களுக்கும் நாங்கள் அக்கறை காட்டுகிறோம்.
உண்மையான ரிலையன்ஸின் நோக்கம் இதுதான், இது எங்களுடன் எப்போதும் இருக்கும் என முகேஷ் அம்பானி பேசினார்.
தொடர்ந்து பேசிய ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் நீடா அம்பானி, “இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியவுடன் இந்தியா கடுமையான ஆக்ஸிஜன் பற்றாக்குறையை எதிர்கொண்டது உங்களுக்குத் தெரியும். ரிலையன்ஸ் உடனடியாக ஒரு போர்க்கால அடிப்படையில் செயலில் இறங்கியது.
பாரம்பரியமாக, நாங்கள் ஒருபோதும் மருத்துவ தர திரவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யவில்லை. ஆயினும், தேவை ஏற்பட்டபோது, அதிக தூய்மை கொண்ட மருத்துவ தர திரவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதற்காக, சில நாட்களில் எங்கள் ஜாம்நகர் (குஜராத்) சுத்திகரிப்பு நிலையத்தில் இதற்கான வசதியை உருவாக்கினோம், இரண்டு வாரங்களுக்குள், ஒரு நாளைக்கு 1100 மெட்ரிக் டன் அளவுக்கு உற்பத்தியை அதிகரித்தோம் என்றார்.
ஜியோ பல்கலைக்கழகம்:
ரிலையன்ஸ் அறக்கட்டளையால் நவி மும்பையில் உருவாக்கப்பட்டுள்ள ஜியோ பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படுவதாக நீடா அம்பானி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ரிலையன்ஸ் அறக்கட்டளையால் நவி மும்பையில் உருவாக்கப்பட்டுள்ள ஜியோ பல்கலைக்கழகமானது பிரதமர் மோடியால் மூன்று ஆண்டுகளுக்கு முன் ‘எமினன்ஸ்’ பல்கலைக்கழகமாக (ஐஓஇ) அறிவிக்கப்பட்டது. ஜியோவுக்கு 2018 ஆம் ஆண்டில் ‘கிரீன்ஃபீல்ட்’ பிரிவின் கீழ் ஐஓஇ அந்தஸ்து வழங்கப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஜியோ பல்கலைக்கழகம் தனது முதல் கல்வியாண்டில், செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், டிஜிட்டல் மீடியா மற்றும் இளங்கலை பட்டதாரிகளுக்கான ஒருங்கிணைந்த சந்தைப்படுத்தல் தொடர்பு ஆகிய பாடப்பிரிவுகளை தொடங்க திட்டமிட்டுள்ளது.
ரிலையன்ஸ் அறக்கட்டளை கொரோனாவுக்கு எதிராக மிஷன் ஆக்ஸிஜன், மிஷன் கொரோனா உள்கட்டமைப்பு, மிஷன் அன்னசேவா, மிஷன் ஊழியர்கள் நலன் மற்றும் மிஷன் தடுப்பூசி என 5 மிஷன்களை தொடங்கியுள்ளது என கூறிய நீடா அம்பானி, தொடர்ந்து பேசுகையில், கொரோனா தொற்றுநோய் மனிதகுல நெருக்கடி. இது மனிதகுலத்தின் மனநிலையை சோதித்துள்ளது. ஆனால் இருண்ட கட்டத்தில் கூட, நம் மனங்கள் பிரகாசித்தது. மக்களாகிய நாம் ஒன்று கூடி இந்தப் போரில் ஈடுபட்டோம் என கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.