மாற்றுத்திறனாளி சிறுவனை அவமரியாதையாக நடத்திய இன்டிகோ விமான நிறுவனத்திற்கு மத்திய விமான போக்குவரத்து ஆணையம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
கடந்த மே 7ஆம் தேதி ராஞ்சியில் இருந்து ஹைதராபாத் சென்ற விமானத்தில் மாற்று திறனாளி சிறுவனுடன் அவரது பெற்றோர் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். அந்த சிறுவன் நீண்ட நேரம் காரில் பயணித்ததன் காரணமாக அவனுக்கு அசவுகரியம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அச்சிறுவனுக்கு தேவையான சிறப்பு கவனிப்பையும் உதவிகளையும் பெற்றோர் விமான நிலையத்தில் வழங்கியுள்ளனர்.
விமானம் ஏறுவதற்கு முன்னதாக அவர்கள் சிறுவனை கவனித்துக் கொண்டு காத்திருந்த நிலையில், அச்சிறுவனை விமானத்தில் ஏற்ற அனுமதிக்க முடியாது என இன்டிகோ நிறுவன மேலாளர் பெற்றோரிடம் ஆவேசமாகப் பேசியுள்ளார். அச்சிறுவனால் விமானத்தில் பயணிக்கும் மற்ற பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படும் எனக் கூறிய அந்த மேலாளர் சிறுவனின் உடல் நிலையை கருத்தில் கொள்ளாமல் அவரை அவமதிக்கும் விதமாக செயல்பட்டுள்ளார்.
மேலாளரின் செயலுக்கு சக பயணிகள் கண்டனம் தெரிவித்த நிலையிலும் அவர் அதை அலட்சியப்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தை சக பயணி ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த சம்பவம் வைரலானதை தொடர்ந்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி மே 9ஆம் தேதி விமான போக்குவரத்து துறை ஆணையம் குழு ஒன்றை அமைத்தது.
இதையும் படிங்க: சமூக வலைத்தளத்தின் பவரால் 10 வயது சிறுமிக்கு கிடைத்தது செயற்கை கால்
இந்த குழு இன்டிகோ நிறுவனம் அதன் மேலாளரின் செயல் தவறானது எனக் கூறி ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இதுபோன்ற சூழல்களில் விமான ஊழியர்கள் கவனத்துடனும் பக்குவத்துடனும் செயல்படுவது அவசியம் என அறிவுறுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.